சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'குபேரா' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை படக்குழு ஒத்திவைத்துள்ளது.

Kuberaa Pre Release Event Postponed : தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் குபேரா. சேகர் கம்முலா இயக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 20ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெறவிருந்த 'குபேரா' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை படக்குழு ரத்து செய்துள்ளது.

குபேரா ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது ஏன்?

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக இந்த நிகழ்ச்சியை ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு X பக்கத்தில் தெரிவித்துள்ளது. "அகமதாபாத் விமான விபத்தின் காரணமாக, ஐதராபாத்தில் ஜூன் 13ந் தேதி நடைபெறவிருந்த குபேரா ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. துயரத்தில் உள்ள குடும்பங்களுடன் நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம்" என்று அவர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.

முன்னதாக, விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் படக்குழு இரங்கல் தெரிவித்தது. அவர்களின் X பக்கத்தில், "அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் இதயப்பூர்வமான இரங்கல்கள். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தக் கடினமான சூழ்நிலையில் உங்களுக்கு பலம் கிடைக்கட்டும்" என்று பதிவிட்டிருந்தனர்.

Scroll to load tweet…

குபேரா ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி எப்போ நடைபெறும்?

தனுஷ், ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்தின் மூன்றாவது பாடலான 'பிப்பி பிப்பி' சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்காக மும்பையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் படத்தின் முன்னணி நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். இன்று ஐதராபாத்தில் நடைபெற இருந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி வருகிற ஜூன் 15ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

லண்டனின் கேட்விக் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் AI-171, அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பியதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் 169 இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷை சேர்ந்தவர்கள், 7 போர்ச்சுகீஸ் பயணிகள் மற்றும் ஒருவர் கனடாவை சேர்ந்தவர் பயணம் செய்துள்ளனர். அதிசயமாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பிரிட்டிஷ் பயணி உயிர் தப்பியதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.