சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக கூறி மலேசியாவில் புகழ்பெற்ற தொழிலதிபராக விளங்கி வரும் டத்தோ மாலிக் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூரை அடுத்த மீமிசல் கிராமத்தை சேர்ந்தவர் தான் அப்துல் மாலிக் தஸ்தகீர். வேலைக்காக மலேசியா சென்ற இவர், அங்கு ஜவுளிக்கடையில் வேலைபார்த்து வந்துள்ளார். பின்னர் தொழிலதிபராக மாறிய இவர், தமிழ் திரைப்படங்களை வாங்கி மலேசியாவில் விநியோகம் செய்து நல்ல லாபம் பார்த்தார். அங்கு எடுக்கப்படும் படங்கள் சிலவற்றையும் இவர் தயாரித்துள்ளார். இதுதவிர தங்க, வைர நகை வியாபாரத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

டத்தோ மாலிக் என அழைக்கப்படும் இவர் மலேசியாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி அதன்மூலம் கோடிகோடியாய் சம்பாதித்து வருகிறார். தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் மற்றும் இசையமைப்பாளர்களை வைத்து ஏராளமான கலை நிகழ்ச்சிகளையும் அவர் நடத்தி இருக்கிறார். இதனால், கோலிவுட் பிரபலங்களுக்கு இவர் மிகவும் பரிட்சயம் ஆனவரும் கூட. கலை நிகழ்ச்சிக்காக வரும் சினிமா பிரபலங்களை தனி விமானத்தில் அழைத்து வருவது முதல், அவர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்து தருவது வரை அனைத்தையும் நன்கு கவனித்துக் கொள்வாராம்.

இதையும் படியுங்கள்... தியேட்டரில் டபுள் மடங்கு லாபம் பார்த்த ‘மாமன்னன்’... இப்போ ஓடிடி-க்கு வந்தாச்சு! மொத்த வசூல் நிலவரம் இதோ

இதன் காரணமாகவே இவரை பிரபலங்கள் முதலாளி என்று தான் அழைப்பார்களாம். இப்படி புகழ்பெற்ற தொழிலதிபராக வலம் வந்துகொண்டிருந்த டத்தோ மாலிக்கை மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய போலீசார் அண்மையில் கைது செய்துள்ளனர். அவர் சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்ததாகவும், பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி வழங்கியதாகவும் புகார் எழுந்ததன் பேரில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பின்னர் அவர் நேற்று மதியமே ஜாமினில் விடுவிக்கப்பட்டு உள்ளார். டத்தோ மாலிக் கைது செய்யப்பட்ட சம்பவம் அறிந்த தமிழ் திரையுலக பிரபலங்கள் கலக்கம் அடைந்துள்ளார்களாம். 

இதையும் படியுங்கள்... எக்கச்சக்க கடன்... கண்ணீர் சிந்தும் ஜெயிலர் பட இயக்குனர் - கருணை காட்டுவாரா ரஜினிகாந்த்