பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்துள்ள அடடே மனோகர் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பழம்பெரும் நாடக நடிகரும், தொலைக்காட்சி நடிகருமான அடடே மனோகர்... சமீப காலமாகவே வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு உயிரிழந்தார். இந்த தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுவரை சுமார் 3000-திற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்து பிரபலமானவர் முரளி மனோகர் என்கிற அடடே மனோகர். மேடை நாடகங்களை தொடர்ந்து சீரியல், வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மற்றும் ஏராளமான திரைப்படங்களிலும் காமெடி வேடங்களில் நடித்துள்ளார். தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இவர் நடித்த, 'அடடே மனோகர்' என்கிற காமெடி நிகழ்ச்சி ஹிட் அடித்த நிலையில், பின்னர் ரசிகர்களால் அடடே மனோகர் என்றே அழைக்கப்பட்டார்.

தொடர்ந்து காமெடி வேடங்களை மட்டுமே அதிகம் தேர்வு செய்து நடித்து வந்த மனோகர், எஸ்.வி.சேகர், கிரேசி மோகன், போன்ற ஏராளமான பிரபலங்களுடன் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே வயது மூப்பு காரணமாக, நடிப்பில் இருந்து விலகி ஓய்வில் இருந்தார்.

வயது மூப்பு பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த அடடே மனோகர், நேற்று இரவு உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் தற்போது சென்னை குமரன் சாவடியில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது இறுதி சடங்குகள் இன்று நடைபெற்றதாக கூறப்படுகிறது. தனியார் நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருந்த போதிலும், மேடை நாடகங்கள் மீது கொண்ட பற்றால் இடைவிடாது நடிப்பிலும் கவனம் செலுத்தியவர் அடடே மனோகர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் இரங்கல்களை இவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.