collector booked 350 tickets for bahubali

பாகுபலி திரைப்படம் பார்ப்பதற்காக அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்காக 350 டிக்கெட்டுகளை வாரங்கல் மாவட்ட கலெக்டர் முன்பதிவு செய்துள்ளார்.

பாகுபலி திரைப்படத்தின் 2-ம் பாகம் இன்று உலகமெங்கும் சுமார் 7,500 திரையரங்குகளில் திரைப்பட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத் தில் பாகுபலி திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, பாகுபலி படத்தின் 2-ம் பாகம் சுமார் ரூ.480 கோடியில் எடுக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதில் கதாநாயகனாக பிரபாஸ் நடித்துள்ளார், ராணா, நாசர்,சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா, ரோஹினி உட்பட பலர் நடித்துள்ளனர்.

 ஐதராபாத் உட்பட தெலங்கானா மாநிலத்திலும், விஜயவாடா, விசாகப்பட்டினம், திருப்பதி உள்ளிட்ட ஆந்திர மாநில தியேட்டர்களில் பாகுபலி-2 படத்துக்கான டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கியது. ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். 

பாகுபலி-2 திரைப்படத்தை ஆந்திராவில் உள்ள தியேட்டர்களில் தினமும் 6 முறையும்,தெலங்கானாவில் 5 முறையும் திரையிட அந்தந்த மாநில அரசுகள் அனுமதி வழங்கி உள்ளன. எனவே, முதல் நாளிலேயே இந்தப்படம் ரூ.70 கோடி முதல் ரூ.90 கோடி வரை வசூல் செய்து சாதனை புரியலாம் எனத் தெரிகிறது.

இதற்கிடையே தெலங்கானாவைச் சேர்ந்த மாவட்ட கலெக்டர் அம்ரபாலி காட்டா முதல் காட்சியைக் காண 350 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளார். தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவால், சிறந்த கலெக்டர் என அம்ரபாலி பாராட்டப் பெற்றவர்.

இந்நிலையில் வாரங்கல் நகரத்தை அழகுபடுத்த சுமார் 300 அரசு அதிகாரிகள், ஊழியர்கள் இரவும், பகலும் உழைத்தனர். இதனால் தற்போது வாரங்கல் நகரம் பசுமையாக காட்சியளிக்கிறது. இதற்காக இதில் பங்கேற்று உழைத்தவர்களுக்காக மாவட்ட கலெக்டர் அம்ரபாலி பாகுபலி-2 படத்தின் 350டிக்கெட்டுகளை வாரங்கல் கோட்டாட்சியர் மூலம் முன்பதிவு செய்துள்ளார். மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் உட்பட அரசு ஊழியர்கள் என சுமார் 350 பேர் நாளை காலை முதல் காட்சியைக் காண உள்ளனர்.