2 நாளில் மன்னிப்பு கேட்காவிட்டால் கல்லால் அடித்துக்கொல்வோம்.. விஜய் சேதுபதிக்கு, தயாரிப்பாளர் கொலை மிரட்டல்!
தொடர்ச்சியாக மிரட்டல் வரும் வேளையிலும், தம்மை தாக்கியவர் மீது விஜய் சேதுபதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கததும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
தொடர்ச்சியாக மிரட்டல் வரும் வேளையிலும், தம்மை தாக்கியவர் மீது விஜய் சேதுபதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கததும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை இழிவுபடுத்திவிட்டார் என்ற எதிர்ப்புக்குரல்களே இந்த வாரத்தின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. கடந்த 3-ஆம் தேதி, புனீத் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்த சென்ற விஜய் சேதுபதியை, பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து இளைஞர் ஒருவர் எட்டி உதைத்தார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் சேதுபதி மீதான தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து விளக்கமளித்த பெங்களூரு காவல்துறை, சம்மந்தப்பட்ட இளைஞர் மது அருந்தியிருந்தார். விஜய் சேதுபதி தாக்கப்படவில்லை. அவரது உதவியாளர் தான் தாக்கப்பட்டார், இருதரப்பிலும் பேசி பிரச்சினை சுமூகமாக முடிந்தது என்று கூறியிருந்தது.
மறுபுறம் விஜய் சேதுபதி தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், அவரை தாக்கிய இளைஞர் மகா காந்தி, மதுபோதையில் தகாராறில் ஈடுபட்டார் என்று கூறியிருந்தனர். இதனைக்கண்டு பொங்கி எழுந்த மகா காந்தி, விமான நிலையத்தில் விஜய் சேதுபதியை சந்தித்தபோது அவர் தேசிய விருது வாங்கியதற்கு வாழ்த்து கூறினேன். அதற்கு அவர் இது தேசமா என்று பதிலளித்தார். தேவர் குருபூஜைக்கு சென்றீர்களா என கேட்டேன். அப்போது யார் குரு என்று அவர் கேள்வி எழுப்பினார். இதனால் எழுந்த தகராறில் அவர்கள் என்னை தாக்கினர். இதையடுத்தே நான் எட்டி உதைத்தேன் என்று கூறியிருந்தார். மேலும், விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவை தாம் கேட்டிருப்பதாகவும், அது கிடைத்ததும் விஜய் சேதுபதியின் நாடகம் அம்பலமாகும் என்றும் மகா காந்தி தெரிவித்துள்ளார்.
பசும்பொன் தேவரை விஜய் சேதுபதி இழிவுபடுத்திவிட்டார் என்றதுமே முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அவருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். விஜய் சேதுபதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். இதனிடையே தேவர் அய்யாவை இழிவுபடுத்தியதற்காக நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு ரூ.1001 வழங்கப்படும் என்று இந்து மக்கள் கட்சி சர்ச்சையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கையை திரைப்படமாக தயாரித்து வரும் தயாரிப்பாளர் ஏ.எம்.செளத்ரி என்பவரும் விஜய் சேதுபதிக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இதுகுறித்து திரைப்பட தயாரிப்பாளர் ஏ.எம்.செளத்ரி வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ஓவரா பேசுர வாயும், ரோட்ல சுத்துற நாயும் அடிபட்டே சாகும். விஜய் சேதுபதி அதேநிலையில் இருக்கிறார். அவரது சமீப காலமாக திமிருடன் பேட்டியளிப்பதை விஜய் சேதுபதி வழக்கமாக்கிக்கொண்டுள்ளார். பசும்பொன் தேவரையே யார் குரு என்று விஜய் சேதுபதி கேட்டதாக கூறப்படுகிறது.
இது தேசமா என்ற கேள்வியை விஜய் சேதுபதி கேட்டிருக்கிறார். அவரையெல்லாம் அழைத்து தேசிய விருது கொடுத்தால் அப்படிதான் பேசுவார். விஜய் சேதுபதிக்கு தேசபக்தி என்றால் என்னவென்றே தெரியாது. பத்து கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு நடிக்கும் விஜய் சேதுபதி, திமிரில் பேசி வருகிறார். பெரியார் புத்தகத்துடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தபோதே விஜய் சேதுபதி யார் என்ன்பது தெரிந்துவிட்டது. அவருக்கு தேச பக்தியும் கிடையாது. தெய்வ பக்தியும் இருக்காது.
தமக்கு வாய்ப்பூட்டு சட்டம் போடப்பட்ட போதும், வெள்ளையர்களை எதிர்த்து, நாடு சுதந்திரம் பெற தூணாக விளங்கியவர் தேவர். இன்னைக்கு நீங்க வாய் பேச காரணமே தேவர் தான். தேவர் தான் தேசத்தின் குரு, வாழ்க்கையின் குரு, விஜய் சேதுபதி போன்ற மோசமானவர்கள் கடைபிடிக்கும் அளவிற்கு தேவர் கிடையாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இறுதியாக, இந்த சர்ச்சை குறித்து விஜய் சேதுபதி 2 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். குரு யார் என்று விஜய் சேதுபதி கேட்டிருந்தால் அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் போகும் இடத்தில் எல்லாம் கல்லடிபட்டே சாவாய். எங்க இருந்து கல்லால் அடிப்பார்கள் என்றே தெரியாது. உடனடியாக மன்னிப்பு கேட்காவிட்டால் உன் வீடு, படப்பிடிப்பு தளம் என அனைத்தும் முற்றுகையிடப்படும் என்று விஜய் சேதுபதிக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இந்த பிரச்சினையை முடித்து வைக்காமல் விஜய் சேதுபதி தப்பிக்கவே முடியாது என்று தயாரிப்பாளர் செளத்ரி கூறியிருக்கிறார். விஜய் சேதுபதிக்கு தேவரின அமைப்புகள், இந்து அமைப்புகளை தொடர்ந்து அவர் சார்ந்த திரைத்துறையில் இருந்தே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.