Chiyaan vikram: நீண்ட நாள் கனவு நனவானது... பிரபல பாடகி உடனான சந்திப்பு குறித்து விக்ரம் நெகிழ்ச்சி
முன்னணி நடிகராக இருக்கும் விக்ரம், பணிவாக எந்த ஒரு பந்தாவும் இல்லாமல், அத்தனை அடக்கமாக பழகியது ஆச்சர்யபடும் வகையில் இருந்ததாக பாடகி பி சுசீலா தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் தற்போது கோப்ரா, துருவ நட்சத்திரம், மகான், பொன்னியின் செல்வன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் மகான், கோப்ரா போன்ற படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்காக காத்திருக்கின்றனர். அதேபோல் துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
நடிகர் விக்ரம், பாடகி பி.சுசீலாவின் தீவிர ரசிகராம். அவரை எப்படியாவது நேரில் சந்திக்க வேண்டும் என ஆசைப்பட்டாராம் விக்ரம். தற்போது அவரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறி உள்ளது. இந்த அழகான தருணம் குறித்து பாடகி சுசீலா தரப்பில் இருந்து சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: “அக்டோபர் மாதம் ஒரு நாள் சுசீலாம்மா வீட்டிற்கு ஒரு போன் வந்தது. நடிகர் விக்ரம் அவர்களின் மேனேஜர் பேசினார். விக்ரம், சுசீலா அம்மாவின் பெரிய விசிறி என்றும் அவர்களை சந்திக்க விரும்புவதாகவும் கூறினார். அடுத்த நாள் மாலை வரலாம் என்று அம்மா கூறினார்கள்.
அம்மாவை பார்த்த மகிழ்ச்சி ஒரு பக்கம், பயம் கலந்த மரியாதை ஒரு பக்கம், சிறிது நேரம் கனவுலகில் இருந்தார் என்றால் மிகையாகாது. அம்மா அத்தனை சகஜமாக பழகுவார் என்று எதிர்பார்க்கவில்லை , அவர்களின் பாடல்கள் போலவே அவர்களின் பேச்சும் அத்தனை இனிமையாக இருக்கிறதே என்று வியந்தார் விக்ரம். அம்மாவிடம் பல பாடல்கள் பற்றி பேசினார். அம்மா சில பாடல்கள் பாட அவரும் உடன் பாடினார்.
இன்றைய முன்னணி கதாநாயகர் விக்ரம் இத்தனை பணிவாக எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் அத்தனை அடக்கமாக பழகியது ஆச்சர்யபடும் வகையில் இருந்தது. மனதிற்கு சந்தோஷமாகவும் இருந்தது. பத்து நிமிடம் அம்மாவை பார்த்து விட்டு போகலாமென வந்தவர் 2 மணிநேரம் பேசிகக்கொண்டிருந்து விட்டு மனமில்லாமல் அவசர வேலையாய் கிளம்பி சென்றார்.
என் வாழ்க்கை கனவு நனவானது என்றும் அதற்கு அந்த ஆண்டவனுக்கு நன்றி என்றும் கூறி விட்டு சென்றார். அம்மாவுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் அடிக்கடி வருகிறேன் என்றும் கூறிவிட்டு சென்றார். நல்ல ஒரு மாலை பொழுதை எங்களுக்கு அளித்த விக்ரம் அவர்களுக்கு நன்றி. இத்தனை உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒரு முன்னணி நடிகர், இவ்வளவு எளிமையாக இருப்பது அபூர்வம். நன்றி விக்ரம் சார்” என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.