நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடித்து முடித்துள்ள, 'அயலான்' (Ayalan) படத்தை வெளியிட  சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் திரைப்படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில், ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவாகும் அயலான் படத்தை 24 ஏ. எம் ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் டேக் என்டெர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வெங்கடேஷ் என்பவர் 'அயலான்' திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தங்கள் நிறுவனத்திடம் இருந்து 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் 5 கோடி கடனாக பெற்றிருந்த நிலையில், தற்போது வட்டியோடு சேர்ந்து 6 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து அயலான் படத்தை தயாரிக்கும் நிலையில், தங்களுக்கு தர வேண்டிய பணத்தை செலுத்தாமல் படத்தை வெளியிடவோ,விநியோகம் செய்யவோ தடை விதிக்க கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அயலான் படத்தை வெளியிட 2022, ஜனவரி 3 ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்தார். மனுதாரர் தரப்போடு உள்ள பிரச்சனையை முடித்து கொள்வதும் மேற்கொண்டு இந்த வழக்கில் பதிலளித்து வழக்கை தொடர்வதும் படக்குழுவின் விருப்பம் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் இந்த படம் வெளியாகும் என காத்திருந்த படக்குழுவிக்கு இது பேரிடியாக அமைத்துள்ளது. அதே நேரத்தில் சிவகார்த்திகேயனின் இந்த படம் சிக்கலில் சிக்கியுள்ளது இப்படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.