மீண்டும் விஷால் படத்திற்கு வந்த சிக்கல்..! நீதி மன்றம் அதிரடி உத்தரவு..!
இயக்குநர் எழிலிடம் உதவியாளராக பணியாற்றிய ஆனந்தன் இயக்கத்தில் உருவாகி வரும் சக்ரா படத்தில் விஷால் நடித்து வருகிறார்.
இயக்குநர் எழிலிடம் உதவியாளராக பணியாற்றிய ஆனந்தன் இயக்கத்தில் உருவாகி வரும் சக்ரா படத்தில் விஷால் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். மேலும் ரோபோ சங்கர், ரெஜினா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில் சக்ரா படம் தீபாவளிக்கும் ஓடிடி-யில் வெளியாகும் என்றும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் நடிகர் விஷால் பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் சக்ரா படத்திற்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நடிகர் விஷால் - நடிகை தமன்னா நடிப்பில் வெளியான ஆக்ஷன் என்ற படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்திருந்தார். படத்தில் நஷ்டம் ஏற்பட்டால் 8 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 468 ரூபாயை திருப்பித்தருவதாக கூறி, ரவீந்திரனுடன் நடிகர் விஷால் உறுதி அளித்து ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் விஷால் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது.
மேலும் தங்கள் நிறுவனத்திற்கு ஆனந்தன் கூறிய அதே கதையை தற்போது நடிகர் விஷால் தனது நிறுவனத்திற்கு சக்ரா என்ற பெயரில் எடுத்துள்ளதாகவும், அதனால் அந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தொடர்ந்த வழக்கில் ‘சக்ரா’ படத்தை வெளியிட சென்னை உயர் நீதி மன்றம் தடை உத்தரவு ஒன்றை நீதிமன்றம் பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வாரம் 19 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக இருந்த நிலையில்... படக்குழுவினரும் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். ஏற்கனவே பல பிரச்சனைகளை கடந்து வெளியாக தயாரான 'சக்ரா' படத்திற்கு உயர் நீதி மன்றம் தடை விதித்துள்ளதால். குறிப்பிட்ட தேதியில் படம் ரிலீஸ் ஆகுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் இந்த வழக்கிற்கு பதிலளிக்கும்படி நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் எம்எஸ் ஆனந்தன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.