“போராட்டங்களை திசைதிருப்புவதன் பின்னணியில் சென்சார் போர்டு”...! அரசியல் சூதாட்டமும் உள்ளது...! குமுறிய பிரபல இயக்குனர்...!
உயிர்கொடு காவிரி’ என்கிற வீடியோ ஆல்பம் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டு பேசிய இயக்குனர் மீரா கதிரவன்... “மூன்று படங்களை இயக்கிவிட்ட ராகேஷ் நினைத்திருந்தால், எங்கேயாவது இருட்டு அறையில் முரட்டு குத்து குத்தி ஒரு படத்தை எடுத்து காசு பார்க்க கிளம்பியிருக்கலாம். ஆனால் அவர் காவிரி நீரை பற்றி படம் எடுக்க முன்வந்ததற்காக அவருக்கு தலைவணங்குகிறேன் என்று தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு, காவிரி, நீட் தேர்வு என ஒருபக்கம் இளைஞர்கள் போராட, இன்னொரு பக்கம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தை கொண்டாடுவதும் நம் இளைஞர்கள் தான், இங்கே உளவியல் ரீதியான சிக்கல் இருக்கிறது. அதை சரிசெய்யவேண்டும், இங்கே சென்சார் அமைப்பை நான் வன்மையாக கண்டிக்கிறேன். என் படங்களில் சின்ன விஷயங்களில் கூட பெரிய அளவில் ஆட்சேபனை தெரிவித்த சென்சார் போர்டு, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்திற்கு எந்த சிக்கலும் இல்லாமல் எப்படி சான்றிதழ் கொடுத்தார்கள்.
இதற்குப்பின்னால் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது. இதுபோன்ற படங்கள் மூலம் இளைஞர்களின் கவனத்தை போராட்ட களங்களில் இருந்து திசைதிருப்ப மறைமுகமாக முயற்சிகிறார்கள். இயற்கை வளங்களை சுரண்டி எடுப்பதற்காக சொந்த நாட்டு மக்களையே அகதிகளாக மாற்றும் அவலம் இங்கேதான் நடக்கிறது, தமிழ் இனத்தின் மீது மிகப்பெரிய போர் தொடுக்கப்பட்டு இருக்கிறது.
உடை என்பது நமக்கு பெரிய ஆயுதம். கருப்பு சட்டையை கண்டால் அலறுகிறார்களே, அதனால் தான், காவிரியை நாம் நிச்சயமாக மீட்டுக்கொண்டு வந்துவிடுவோம், ஆனால் மீட்டபின் அதை தக்கவைக்கும் முயற்சி என்ன என்பதுதான் கேள்விக்குறி. இங்கிருந்து அள்ளப்படும் மணல் எல்லாம். நமக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவுக்குத்தான் போகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும். இதில் மிகப்பெரிய அரசியல் சூதாட்டம் நடக்கிறது” என தனது குமுறலை கொட்டினார்.