நடிகை அமலாபால் மலேசிய பயணத்தின் போது அவரை இரவு விருந்துக்கு அழைத்த வழக்கில் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நடிகை அமலாபால் மலேசிய பயணத்தின் போது அவரை இரவு விருந்துக்கு அழைத்த வழக்கில் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகை அமலாபால் மைனா, தலைவா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் 2018 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் மலேசியாவில் நடந்த கலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள மலேசியா செல்ல இருந்தார். அதற்கு முன்னதாக சென்னை தி நகரில் ஸ்ரீதர் என்பவர் நடத்தி வரும் " மான் ஜான்ஸ்" என்ற டான்ஸ் பயிற்சி அகாடமியில் அமலாபால் பயிற்சி பெற்று வந்தார். அப்போது அழகேசன் என்பவர் அமலாபாலிடம் மலேசியா செல்லும்போது இப்ராஹிம் என்பவருடன் இரவு உணவு விருந்து சாப்பிட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அமலாபால் 2018 பிப்ரவரி மாதம் தி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். காவல் ஆய்வாளர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த வழக்கில் ஸ்ரீதர், அழகேசன், பாஸ்கரன், இப்ராஹிம் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை சைதாப்பேட்டை 17வது குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சைதாப்பேட்டை சேர்ந்த தொழிலதிபர் பாஸ்கர், ஸ்ரீதர் ஆகியோர் தங்கள் மீதான வழக்கு விசாரணைக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதில் தங்களுக்கு எந்த தொடர்புமில்லை, ஆனால் தாங்களும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளோம், எனவே ஒரு தவறும் செய்யாத எங்களுக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அதில் கூறியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் வழக்கு மீண்டும் நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இது தொடர்பான குற்றப்பத்திரிக்கை ரத்து செய்ய முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
