காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் கேப்டன் மகன் சண்முக பாண்டியனின் புதிய படம்!
கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும், புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.

Directors Cinemas தயாரிப்பில், U அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்சன் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் எளிமையாக பூஜையுடன் துவங்கியது. முதல் நாள் படப்பிடிப்பில் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தி மகனின் படப்பிடிப்பை துவங்கி வைத்தார்.
இப்படம் இதுவரை திரையில் கூறப்படாத புதுமையான திரைக்கதையில், முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஏற்கனவே “வால்டர்” மற்றும் "ரேக்ளா" போன்ற படங்களை இயக்கிய, இயக்குநர் U அன்பு எழுதி - இயக்குகிறார். “நட்பே துணை” பட இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுத உள்ளார்.
இதுவரை திரையில் கண்டிராத காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையை, இப்படத்தின் மூலம் இருவரும் சேர்ந்து பதிவு செய்ய உள்ளனர். கேரள காடுகளில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. மேலும் ஒரிசா, தாய்லாந்து, காடுகளில் படப்பிடிப்பு நடத்தப் படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு சண்முக பாண்டியன் வித்தியாசமான தோற்றத்தில் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார். கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும் இப்படத்தில் நடிக்க, திரைத்துறையின் முன்னணி நட்சத்திரங்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறார்கள். மேலும் இப்படத்தின் தலைப்பை ஆடி 18 ஆம்தேதி அறிவிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. படம் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.