சிறுவன் Puneeth Rajkuma-ரை தூக்கி வைத்திருக்கும் அரும்பு மீசை ஆக்ஷன் கிங்.. மை டியர் அப்பு என உருக்கம்.!
“சில விஷயங்கள் மட்டும் மூழ்காது.. மை டியர் அப்பு நித்தியமானவர்” என்று அர்ஜூன் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் சிறுவனாக இருந்தபோது தூக்கி வைத்திருந்தபோது எடுத்த புகைப்படத்தை நடிகர் அர்ஜூன் பகிர்ந்துள்ளார்.
கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் புனீத் ராஜ்குமார், அக்டோபர் 29 அன்று உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டது. அவரைக் காப்பாற்ற எவ்வளவோ போராடியும் புனீத் ராஜ்குமார் அடுத்த சில மணி நேரங்களில் காலமானார். அவருடைய மறைவு கர்நாடக மக்களையும் கன்னட திரையுலகைச் சேர்ந்தவர்களையும் கண்ணீர்க் கடலில் ஆழ்த்தியது. புனீத்தின் மரணம், ஒவ்வொருவருடைய வீட்டிலும் ஏற்பட்ட இழப்பைப் போல கர்நாடக மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் இரு நாட்கள் அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் அவருடைய உடல் கண்டீரவா ஸ்டூடியோவில் அவருடைய பெற்றோர் நினைவிடத்துக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.
புனீத் ராஜ்குமாரை கவுரவப்படுத்தும் வகையில், அவருக்கு கர்நாடகா ரத்னா விருதும் அறிவிக்கப்பட்டது. புனீத் ராஜ்குமார் மறைந்து 40 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், அவருடைய நினைவிடத்துக்கு நாள்தோறும் ஏராளனாமோர் வந்தனர்.இதேபோல திரைத் துறையைச் சேர்ந்தவர்களும் அவருடைய நினைவிடத்துக்கு வந்து செல்கின்றனர். புனீத்துடனான தங்களுடைய நினைவுகளையும் சக நடிகர், நடிகைகள் இன்னும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் புனீத் ராஜ்குமாரை சிறுவயதில் நடிகர் அர்ஜூன் தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்தை அர்ஜூன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
புனீத் ராஜ்குமார் சிறுவராகவும் நடிகர் அர்ஜூன் அரும்பு மீசையுடனும் இருக்கும் அந்தப் புகைப்படத்தை பதிவிட்டதோடு, “சில விஷயங்கள் மட்டும் மூழ்காது.. மை டியர் அப்பு நித்தியமானவர்” என்று அர்ஜூன் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்து, புனீத் ராஜ்குமாரைப் பற்றி குறிப்பிட்டு நினைவஞ்சலியைச் செலுத்தி வருகிறார்கள்.