பவதாரிணியின் மறைவு பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்று.! கமல் ஹாசன் இரங்கல்!
இளையராஜாவின் மகள் பவதாரிணி கல்லீரல் புற்றுநோய் காரணமாக நேற்று உயிரிழந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் மிகவும் உருக்கமாக தன்னுடைய இரங்கலை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரிணி நேற்று கல்லீரல் புற்றுநோயால் காரணமாக இலங்கையில் (ஜனவரி 25ஆம் தேதி) காலமானார். 47 வயதே ஆகும் பவதாரிணியின் இந்த திடீர் மறைவு கோலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரையும் உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பவதாரிணி இலங்கையில் நேற்று மாலை 5 மணியளவில் உயிர் இழந்ததாக கூறப்படும் நிலையில், அவரது உடல் இன்று மாலை சென்னைக்கு கொண்டு வரப்பட உள்ளது. மேலும் இன்று மாலை 6 மணிக்கு, முருகேசன் தெரு, தி நகரில் உள்ள.. இளையராஜாவின் வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட உள்ளது. பவதாரிணியின் மறைவை பற்றி கேள்விப்பட்ட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடந்து நேற்று இரவு முதலே சமூக வலைத்தளம் மூலம் தங்களின் அஞ்சலி கூறி வருகிறார்கள்.
அந்த வகையில், தற்போது... உலக நாயகன் கமல்ஹாசன் மிகவும் உருக்கமான வார்த்தைகளால் பவதாரிணிக்கு மறைவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். கமல்ஹாசன் பதிவிட்டுள்ளதாவது, "மனம் பதைக்கிறது. அருமைச் சகோதரர் இளையராஜாவைத் தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் கைகளை மானசீகமாகப் பற்றிக்கொள்கிறேன். பவதாரிணியின் மறைவு பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்று. இந்தப் பெருந்துயரில் என் சகோதரர் இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும். பவதாரிணியின் குடும்பத்தாருக்கு என் நெஞ்சார்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.