பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசிய பாரதிராஜா…வைரமுத்து விவகாரத்தில் ஆதாரத்தை காட்டு என மிரட்டல் !!
இலங்கையில் வைரமுத்து – சின்மயி விவகாரம் குறித்து பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “நீ பார்த்தியா.. ஆதாரத்தை காட்டு” என இயக்குநர் பாரதிராஜா காட்டமாக பேசியதையடுத்து செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.
உலகம் முழுவதும் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். இதற்காக சர்வதேச அளவில் தொடங்கப்பட்டது தான் #MeToo என்ற பிரச்சாரம்.
அதன் தாக்கம் இந்தியாவிலும் அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. பாலிவுட் நடிகைகள் பலர் முக்கிய பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றனர்.இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர் மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டை வைத்தார். இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டடுள்ளது.
இதே போல் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்துள்ளது தமிழகத்திலும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சின்மயி தெரிவித்த புகார் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக , இலங்கை சென்றிருந்த இயக்குநர் பாரதிராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இயக்குநர் பாரதிராஜாவிடம், வைரமுத்து மீதான சின்மயின் பாலியல் புகார் குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு முதலில், “மன்னிக்கவும், என் சம்பந்தமாக, என் சினிமா சம்பந்தமாக என் தொழில் சம்பந்தமாக எது கேட்டாலும், பதில் சொல்கிறேன்” என்று பாரதிராஜா பதில் அளித்தார்.
ஆனாலும் செய்தியாளர்கள் மீண்டும் #MeToo புகார்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, “என்ன Meet? What Meet? #MeToo என்றால் என்ன? என்ன பிரச்னை?. Metoo பற்றி கேள்விப்படுவதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது; ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்” என்று காட்டமாக பதில் அளித்தார்
பாரதிராஜா. அதோடு, நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். என்னிடம் இனி எந்தக் கேள்வியும் கேட்க கூடாது என ஆங்கிலத்தில் சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.