தமிழகத்தில் எந்திரனின் மொத்த வசூலையும் முறியடித்து முதலிடத்திற்கு வந்த பாகுபலி...
தமிழ் நாட்டில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 'எந்திரன்' படத்தின் மொத்த வசூலை முறியடித்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது 'பாகுபலி 2'.
இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்போடு, ஏப்ரல் 28-ம் தேதி உலகம் முழுவதும் சுமார் 9000 திரையரங்குகளில் வெளியான படம் 'பாகுபலி 2'. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் பெரும் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது 'பாகுபலி 2'. இதுவரை இப்படம் உலகளவில் ரூ.1300 கோடி வசூலைக் கடந்துள்ளது.
பிரபாஸ், அனுஷ்கா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர், ராணா, தமன்னா நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் அடிப்படையிலும், மக்களிடையேயும் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
'பாகுபலி 2' படத்துக்கு இந்திய திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் தமிழக விநியோகத்தில் ரஜினி நடித்த 'எந்திரன்' படம் தான் ஒட்டுமொத்த வசூலில் ரூ.105 கோடியை ஈட்டியது. இதனை 'பாகுபலி 2' 18 நாட்களில் முறியடித்து முதல் இடத்தை பிடித்துள்ளது.