பேயை தாறுமாறாக விரட்டி விரட்டிக் காதலிக்கும் ‘மொட்ட ராஜேந்திரன்’
பெண்ணைக் காதலிக்கும் கதாபாத்திரத்தில்தான் பலரும் விரும்பி நடிப்பார்கள். ஆனால், பேயைப் போய் துரத்தித் துரத்திக் காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து கலகலப்பை ஏற்படுத்தியிருக்கிறார் மொட்ட ராஜேந்திரன்.
எம்.ஆர்.கே.வி.எஸ் சினி மீடியா சார்பாக ஆர். முத்துக்கிருஷ்ணன் மற்றும் எம். வேல்மணி இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆறாம் திணை’. அருண்.சி என்பவர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கதையின் நாயகியாக விஜய் டிவி வைஷாலினி நடித்துள்ளார். முக்கியமான கதாபாத்திரங்களில் மொட்ட ராஜேந்திரன், ரவிமரியா, லாவண்யா, விஜய் டிவி குரேஷி என பலர் நடித்துள்ளனர்.
மலையும் மலை சார்ந்த இடமும், கடலும் கடல் சார்ந்த இடமும் என இலக்கியங்களில் ஐந்திணைகள் பற்றி சொல்லப்படுவது உண்டு. ஆனால் ‘பேயும் பேய்சார்ந்த இடமும்’ ஆக இந்த ‘ஆறாம் திணை’ உருவாகியுள்ளது. பொதுவாக பேய்ப்படங்களில் முக்கியமான அம்சமே பேய்களுக்கென இடம்பெறும் பிளாஸ்பேக் தான். ஆனால் பிளாஷ் பேக் இல்லாமல், ஒவ்வொரு பின்னணியையும் படம் பார்ப்பவர்கள் தாங்களாகவே உணர்ந்து கொள்ளும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் குறிப்பிடத் தக்க அம்சம், பேயை தாறுமாறாக விரட்டி விரட்டி காதலிக்கும் மொட்ட ராஜேந்திரனின் கதாபாத்திரம்தான். இது கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் கதையை நகர்த்த உதவியுள்ளதாம். மொட்ட ராஜேந்திரனுடன் விஜய் டிவி கலக்கப்போவது யாரு டைட்டில் வின்னர் குரேஷி சேர்ந்து, காமெடியில் கலக்கியுள்ளார். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நாளை டிச-27ஆம் தேதி நடைபெற இருக்கிறது.