பான்-இந்தியா திரைப்படங்கள் ஒரு மிகப்பெரிய மோசடி என்று பிரபல பாலிவுட் இயக்குனரும், நடிகருமான அனுராக் கஷ்யப் கூறியுள்ளார்.

Anurag Kashyap Criticize Pan India Movies : பான்-இந்தியா திரைப்பட ஒரு மிகப்பெரிய மோசடி என்று இயக்குனர் அனுராக் கஷ்யப் விமர்சித்துள்ளார். தி இந்துவின் ஹாடில் உச்சி மாநாட்டில் பரத்வாஜ் ரங்கனுடனான உரையாடலில் இதை அவர் தெரிவித்தார். ஒரு திரைப்படம் நாடு முழுவதும் வெற்றி பெற்றால் மட்டுமே அதை பான்-இந்தியன் என்று அழைக்க முடியும் என்று அனுராக் கஷ்யப் கூறினார். பாகுபலி, கேஜிஎஃப், புஷ்பா போன்ற படங்கள் பெரும் பார்வையாளர்களை ஈர்த்து, வசூல் சாதனைகளை முறியடித்தன. இது சினிமா துறையில் அந்த பாணியை பின்பற்றும் போக்குக்கு வழிவகுத்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பான் இந்தியா படங்கள் குறித்து அனுராக் கஷ்யப் கருத்து

“என் கருத்துப்படி, 'பான்-இந்தியா' என்பது ஒரு பெரிய மோசடி” என்று அவர் கூறினார். “ஒரு படம் 3-4 ஆண்டுகள் எடுக்கும். பலர் அந்தப் படத்தை நம்பி வாழ்கிறார்கள், அவர்களின் வாழ்க்கை முறையும் மாறுகிறது. ஆனால் முதலீடு செய்யப்படும் பணம் முழுவதும் திரைப்படத் தயாரிப்புக்குச் செல்வதில்லை. அப்படிச் செல்லும் பணம், அர்த்தமற்ற சிலவற்றிற்காக செலவிடப்படுகிறது. அதில் 1% மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்” என்று அனுராக் கஷ்யப் கூறினார்.

பெரும்பாலும் எதிர்பாராத படங்கள் பெரிய வெற்றியைப் பெறுகின்றன. “உரி: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் வெற்றி பெற்றது, எல்லோரும் தேசபக்தி படங்களை எடுக்கத் தொடங்கினர். பாகுபலிக்குப் பிறகு, பிரபாஸையோ அல்லது வேறு யாரையோ வைத்து பெரிய படங்களை எடுக்க எல்லோரும் விரும்பினர். கேஜிஎஃப் வெற்றி பெற்றது, எல்லோரும் அதைப் பின்பற்ற விரும்புகிறார்கள். கதை சொல்லலின் வீழ்ச்சி அங்கிருந்துதான் தொடங்குகிறது” என்று கஷ்யப் கூறினார்.

ராஜமெளலியை புகழ்ந்த அனுராக் கஷ்யப்

RRR படத்தின் மூலம் உலகளவில் பெரும் வெற்றி பெற்ற S.S. ராஜமௌலியின் ரசிகர் பட்டாளம் 2012-ல் வெளியான ஈகா படத்திலிருந்து படிப்படியாக வளர்ந்து வருவதாக அனுராக் கஷ்யப் கூறினார். சிறந்த படத்திற்கான அகாடமி விருதை வென்ற பாரசைட் (2019) படத்திற்குப் பிறகு தனது திறமையை நிரூபித்த தென் கொரிய இயக்குனர் போங் ஜூன் ஹோவுடன் ராஜமௌலியை அவர் ஒப்பிட்டார். 2003-ல் வெளியான மெமரிஸ் ஆஃப் மர்டர் படத்திலிருந்து தனது திறமையை நிரூபித்தது போலவே ராஜமௌலியும் செய்துள்ளார் என்று அனுராக் கஷ்யப் கூறினார்.

நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ போன்ற ஸ்ட்ரீமிங் தளங்கள் பயனர்களை ஈர்க்க மட்டுமே படங்கள் மற்றும் வெப் தொடர்களை குப்பை போல வெளியிடுகின்றன என்று கஷ்யப் கூறினார். இந்தியாவில் இந்த ஸ்ட்ரீமிங் தளங்கள் “தொலைக்காட்சியை விட மோசமாக” மாறிவிட்டது. கோவிட் தொற்றுக்குப் பிறகு அர்த்தமுள்ள, புத்திசாலித்தனமான படங்களை ஆதரிக்கும் ஸ்ட்ரீமிங் தளங்களின் ஆர்வம் குறைந்துவிட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.