தொகுப்பாளர் ஆவதற்கு முன் புடவை விற்றாரா... ரக்சன்..?
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியின் சீசன் 5 நிகழ்ச்சியை, தொகுத்து வழங்கியதன் மூலம் அனைவராலும் அறியப்பட்டு பிரபலமானவர் ரக்சன். தற்போது 27 வயதாகும் இவர் தொகுப்பாளினி ஜக்குலின் உடன் இணைந்து தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சி பலருக்கு பிடித்த காமெடி நிகழ்ச்சி எனலாம்.
நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவருக்கு சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது ஆர்வம் அதிகமாம். சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர், சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் பி.எஸ்.சி விஷுவல் கம்யூனிகேஷன் படித்தார்.
படிப்பை முடித்தவுடன் சில காலம் வேலை கிடைக்காததால், குடும்ப கஷ்டத்தை உணர்ந்து புடவை வியாபாரம் செய்துள்ளார். பின்னர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி சினிமா கம்பெனிகள் பலவற்றில் ஏறி இறங்கினாராம். அப்போதுதான் 'காதல் தேவதை' படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்துள்ளது.ஆனால் இந்தப் படம் பெரிதாக வெற்றி பெறாததால் இது வரை இவர் திரைப்படத்தில் நடித்தது கூட பலருக்கு தெரியாது.
பின்னர் ராஜ் டிவியில் தொகுப்பாளராக இவருக்கு வேலை கிடைத்தது. அதில் இருந்து கலைஞர், இப்போது விஜய் என தொகுப்பாளராக தன்னை வெற்றிப் பாதையில் நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.
தற்போது இவருக்கும் சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாம். அதே போல் இவருடன் தொகுத்து வழங்கி வந்த ஜாக்குலின் நயன்தாரா நடித்து வரும் 'கோலமாவு கோகிலா' படத்தில் நயனுக்கு தங்கையாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.