உடல் உறுப்பு எடுத்து வர அஜித் டீம் செய்த அபாரம்! 8 மணிநேரம் மாணவர்களுடன் இருந்த அஜித்...
தனது ரசிகர்கள் வெறுமனே விசிலடிச்சான் குஞ்சுகளாகவே இருந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் அஜீத் கட்டி அமைத்த தக்ஷா மாணவர் குழு ஒரு அரிய சாதனையை படைத்துள்ளது. இவர்களை மேலும் உற்சாகப் படுத்தும் விதமாக எட்டுமணி நேரங்கள் இந்த மாணவர்களுடன் செலவழித்த அஜீத் அவர்கள் மேலும் உற்சாகமாக செயல்பட சில ஆலோசனைகளையும் கூறினார்.
வேலூரில் இருந்து சென்னைக்கு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்காக உடல் உறுப்புகளை பாதுகாப்பாக கொண்டு வருவதற்காக, மணிக்கு 120 கிலோ மிட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட புதிய குட்டி ஏர் ஆம்புலன்சை நடிகர் அஜீத்குமாரை ஆலோசகராக கொண்ட அண்ணாபல்கலைகழக மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். இதனை ஏர் ஆம்புலன்சாக பயன்படுத்தும் வகையில் உறுதியாகவும் தரமாகவும் வடிவமைத்துள்ளனர்.
மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் வானில் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த குட்டி ஹெலிகாப்டர் 15 கிலோவுக்கும் மேலான எடையை தூக்கிச்செல்லும் திறன் உடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கு பெரும்பாலும் வேலூரில் இருந்து தான் அதிக அளவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான உடல் உறுப்புகள் கொண்டு வரப்படுகின்றன. சில சமயங்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாக தக்க நேரத்தில் உறுப்புகளை கொண்டு வர இயலாத சிரமம் ஏற்பட்டு விடுவதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து உடல் உறுப்புகளை எளிதாக பாதுகாப்பு பெட்டியில் வைத்து கொண்டுவரும் வகையில் இந்த குட்டி ஹெலிகாப்டரை வடிவமைத்துள்ளனர். வேலூரில் இருந்து சென்னைக்கு உடல் உறுப்புகளை பாதுகாப்பாக கொண்டு வர இயலும் எனவும் இதன் ஆய்வு பணிகள் தற்போது நடந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
மாணவர்களின் சாதனையைப் பாராட்ட முடிவு செய்த நடிகர் அஜீத்குமார் 8 மணி நேரம் மாணவர்களுடன் இருந்து ஹெலிகாப்டரை வெற்றிகரமாக பறக்கவிட்டு ஆய்வு செய்ததார். அதன் வேகத்தை அதிகரிக்கவும் சில ஆலோசனைகளை வழங்கினார்
அண்மையில் நடந்த சர்வதேச போட்டியில் அஜீத்தின் தக் ஷா மாணவர் குழு இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தது. அந்த குட்டி விமானம் சென்னைக்குள் மட்டும் பறக்கும் திறன் கொண்டது.
ஆனால் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஏர் ஆம்புலன்சு ஹெலிகாப்டர் சென்னையில் இருந்து வேலூர் சென்று வேலூரில் இருந்து சென்னைக்கு பாதுகாப்பாக திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை சென்னையில் இருந்தே இயக்க முடியும் என்றும் இது முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் போது சர்வதேச அளவில் மருத்துவ உலகிற்கு பயன்படும் முதல் குட்டி விமானம் என்ற பெருமையை அந்த ஏர் ஆம்புலன்ஸ் பெறும் என்று அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் செந்தில்குமார் தெரிவித்தார்.
செங்கல்பட்டில் அந்த குட்டி ஹெலிகாப்டரின் பறக்கும் திறனை மாணவர்களுடன் இருந்து ஆய்வு செய்த நடிகர் அஜீத் குமார், வெள்ளிக்கிழமை விஸ்வாசம் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் பங்கேற்க புனே செல்கிறார்.