சொகுசு கார் வரி விலக்கு: விஜய்யைத் தொடர்ந்து தனுஷையும் சரமாரியாக விமர்சித்த நீதிபதி...!
சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி வழக்கு தொடர்ந்த நடிகர் தனுஷுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு வரி விலக்கு கோரி நடிகர் தனுஷ் 2015ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். காருக்கு 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் நுழைவு வரி செலுத்த வேண்டுமென வணிக வரித்துறை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தனுஷ் தொடர்ந்த வழக்கில், 50 சதவீத வரியை செலுத்தினாலே சொகுசு காரை பதிவு செய்து கொள்ளலாம் என வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து 30 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் வரியை செலுத்தியதாக தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விதிகளை பின்பற்றி காரை பதிவு செய்ய 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிபதி துரைசாமி உத்தரவிட்டிருந்தார். அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தனுஷ் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து ஆகஸ்ட் 5ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது தனுஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே 50 சதவீத வரியை செலுத்திவிட்டதாகவும், மீதமுள்ள தொகையை நாளை அல்லது நாளை மறுநாள் செலுத்திவிடுவதாகவும் தெரிவித்தார். எனவே வரியை செலுத்த தாங்கள் தயாராக இருப்பதால் மனுவை திரும்ப பெற தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதி, இத்தனை ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் உள்ள போது வழக்கை வாபஸ் பெற வேண்டும் என நினைக்கவில்லை, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் வழக்கை முடித்துக் கொள்ள நீங்கள் எவ்வித முன்னெடுப்பையும் எடுக்கவில்லை. அப்படியானால் வழக்கை இழுத்தடிப்பதில் உங்களது நோக்கம் என்ன? என கேள்வி எழுப்பினார். மேலும் கார் வாங்கும் மனுவில் என்ன பணியில் இருக்கிறீர்கள் என்பதை குறிப்பிடவில்லையே?, பணியையோ, தொழிலையோ குறிப்பிட வேண்டியது அவசியமில்லையா? என சரமாரியான கேள்விகளால் துளைத்தெடுத்தார்.
இதையும் படிங்க: 2 வருஷத்துக்கு கிடையாது... விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா போட்ட திடீர் கன்டிஷன்...!
மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையை பயன்படுத்தும் போது வரி செலுத்த வேண்டியது தானே? என்றும், நீங்கள் எவ்வளவு கார் வேண்டுமானாலும் வாங்குங்கள் ஆனால் செலுத்தும் தொகையை முழுமையாக கட்டுங்கள் என்றும் விஜய்யை விமர்சித்ததை விடவும் ஒரு படி மேலே போய் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பால்காரர் உள்ளிட்ட ஏழைகள் கூட வரி செலுத்தும் போது அதனை செலுத்த முடியவில்லை என என்றாவது நீதிமன்றத்தை நாடுகிறார்களா? என நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கேள்விகளை அடுக்கியுள்ளார்.