மீண்டும் இணையும் 'கட்டா குஸ்தி' படத்தின் கூட்டணி! அதிகார பூர்வமாக அறிவித்த விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்!
கட்டா குஸ்தி திரைப்படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, மீண்டும் நடிகர் விஷ்ணு விஷால், இயக்குநர் செல்லா அய்யாவு உடன் இணைவதை அதிகார பூர்வமாக அறிவித்துளளார்.
![After Gatta Kusthi success vishnu vishal reunion with director chella officially announced mma After Gatta Kusthi success vishnu vishal reunion with director chella officially announced mma](https://static-ai.asianetnews.com/images/01hmv39x1nnh8895603e37r1b3/b40d2409-4bc6-412e-b2a5-40e2c66ae727_363x203xt.jpg)
கடந்த 2022 ஆம் ஆண்டில் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற 'கட்டா குஸ்தி' திரைப்படக்கூட்டணி மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைகிறது. முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்லா அய்யாவு இணையும், இந்த புதிய திரைப்படத்தை, விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் தன்னுடைய 11 வது தயாரிப்பாக உருவாக்குகிறது.
கட்டா குஸ்தி திரைப்படம், குடும்ப பார்வையாளர்களை மகிழ்வித்ததோடு, விமர்சகர்களிடமும் பாராட்டுக்களைக் குவித்தது. மேலும் கடந்த 2022-ம் ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் படங்களில் ஒன்றாக அமைந்தது. இப்படத்தின் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஜோடிக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் இப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில், இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட மூன்றாவது படமாகவும், தமிழ் மொழியில் அதிகம் பார்க்கப்பட்ட முதல் படமாகவும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய வெற்றியைத் தந்த, நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்லா அய்யாவு கூட்டணி மீண்டும் இணைவது, ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன், கட்டா குஸ்தி , எஃப் ஐ ஆர் என மாறுபட்ட களங்களில், தரமான வெற்றிப்படங்களைத் தந்து வரும், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 11 வது படைப்பாக, இப்படம் உருவாகிறது.
மிகப்பெரும் பொருட்செலவில், முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் கூட்டணியில் உருவாகும் இந்த புதிய திரைப்படம், குடும்பத்தோடு கொண்டாடும் அசத்தலான காமெடி கமர்ஷியல் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த புதிய திரைப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள், தற்போது துவங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படம் பற்றிய மற்ற விவரங்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.