Actress Nilani Confessions
என்னை பற்றி மக்கள் பரபரப்பாக பேச வேண்டும் என்பதற்காக தான் நான் துப்பாக்கி சூடு குறித்து கருத்து தெரிவித்தேன் என கைது செய்யப்பட்ட சின்னத்திரை நடிகை நிலானி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து காவலர் சீருடையில் பெண் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் காவலர்கள் குறித்து வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இதையடுத்து வடபழனியை சேர்ந்த ரிஷி என்பவர் கடந்த மே 22ம் தேதி வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்படி இன்ஸ்பெக்டர் சந்துரு விசாரணை நடத்தினர்.

அதில், வீடியோ பதிவு செய்தது சென்னை சாலிகிராமம் அஷ்டலட்சுமி நகரை சேர்ந்த சின்னத்திரை நடிகை நிலானி என்பது தெரியவந்தது. இதையடுத்து நடிகை நிலானி மீது வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வந்தனர். 29 நாள் தீவிர தேடுதலுக்கு பிறகு நேற்று முன்தினம் அதிகாலை நிலானியை நீலகிரி மாவட்டம் குன்னூரில் கைது செய்தனர்.
பின்னர் நேற்று மதியம் 1.15 மணிக்கு சைதாபேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கு முன்பு போலீசார் நடத்திய விசாரணையில் சின்னத்திரை நடிகை நிலானி அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது; எனக்கு சிறு வயதில் இருந்தே எனக்கு சினிமாவில் பெரிய நடிகையாக வலம் வர வேண்டும் என்று ஆசை இருந்தது. இதற்காகவே சென்னைக்கு வந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினேன். ஆனால் தொலைக்காட்சிகளில் தான் வாய்ப்பு கிடைத்தது.

அதை வைத்து ஜல்லிக்கட்டு போராட்டம், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் என சமூக பிரச்னைக்கான போராட்டங்களில் தமிழ் இயக்கங்களுடன் சேர்ந்து போராடி பிரபலமாக நினைத்தேன். ஆனாலும் என்னை பற்றி பெரிய அளவில் பொதுமக்கள் பேசவில்லை.
இதனையடுத்து, தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்த நேரத்தில் சின்னத்திரை படப்பிடிப்பில் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் போது அவர்கள் சீருடையிலேயே பேஸ்புக் பக்கத்தில் நேரலையாக பேசினேன்.

அந்த நேரலை வீடியோவை லட்சகணக்கில் பார்த்தனர். மேலும், உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களிடம் என்னுடைய பேச்சு சென்றடைந்தது. அதன் பிறகு நான் உலகம் முழுவதும் ஒரே நாளில் பிரபலமானேன். அதற்காக தான் நான் அவ்வளவு நாள் காத்திருந்தேன்.

அதன்பின்னர், என்னுடைய பேஸ்புக் பக்கத்தை ஆயிரக்கணக்கானோர் பின் தொடர்ந்தனர். என்னை பற்றி மக்கள் பரவலாக பேச வேண்டும் என்பதற்காகத்தான் வீடியோவை பதிவு செய்தேன். மேலும், பட வாய்ப்புக்கான விளம்பரமாக இது அமையும் என்று நினைத்தேன். அதன்படியே நடந்தது. மற்றப்படி காவல் துறை பற்றி தவறாக பேசும் எண்ணம் இல்லை என வாக்குமூலம் அளித்துள்ளார்.
