இயக்குனர் 'சித்திக்' நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், அவருடன் பிரெண்ட்ஸ் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து உருக்கமாக கூறி அறிக்கை மூலம், தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா. 

கடந்த 15 நாட்களுக்கும் மேலாக, கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில், கல்லீரல் மற்றும் நிமோனியா பிரச்சனை காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் சித்திக்கிற்கு நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 7) ஆம் தேதி மதியம் திடீர் என மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து, தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு எக்மோ சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி, இயக்குனர் சித்திக் நேற்று இரவு உயிரிழந்தார்.

இவரின் மரணம் ஒட்டுமொத்த கேரள திரையுலகையும் உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பல பிரபலங்கள், சித்திக்கின் உடலுக்கு நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தினர். சித்திக் மலையாளத்தில் பிரபலமான இயக்குனராக இருந்தாலும், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக விஜய் - சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற பிரெண்ட்ஸ் படத்தை இயக்கியதும் இவர் தான்.

இந்நிலையில் இயக்குனர் சித்திக் பற்றி மிகவும் நெகிழ்ச்சியான வார்த்தைகளுடன், சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது... உங்களால் நினைவுகளால் என் மனம் கனமாகியுள்ளது. சித்திக் சார் உங்கள் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு. உங்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு என் இதயத்தில் இருந்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த துக்கமான தருணத்தில் உங்கள் அனைவருடனும் நான் நிற்கிறேன்.

 ‘பிரண்ட்ஸ்’ படம் எனக்கு மிகவும் முக்கியமான படம். சிறிய காட்சியில் என் நடிப்பு நன்றாக இருந்தால் கூட உடனே என்னை பாராட்டி ஊக்குவிப்பார். படப்பிடிப்பின் போதும், எடிட் செய்யும் போதும், எனது நடிப்பு குறித்த அவர் தனது எண்ணங்களை மிகுந்த பாசத்துடன் பகிர்ந்துகொள்வார்.

படம் இயக்கத்தை கூட ரசிக்கவும், சிரிக்கவும், எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கடந்து செல்லவும் எனக்கு கற்றுக்கொடுத்தவர் நீங்கள். ‘பிரண்ட்ஸ்’ படம் எடுக்கும் காலக்கட்டத்தில் நீங்கள்புகழ்பெற்ற இயக்குநராக இருந்த போதும், அன்பான அணுகுமுறையால் அனைவரையும் சமமாக நடத்தினீர்கள். படப்பிடிப்பு தளத்தில் அவர் கோபமடைந்து நான் பார்த்ததே இல்லை. அவருடன் பணிபுரிவது என்றென்றும் எனக்கு விருப்பமான ஒன்று. என் திறமையை நான் நம்ப வேண்டும் என எனக்கு கற்றுக்கொடுத்தவர். ஆரம்ப காலத்தில் என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. மிஸ் யூ சார். நீங்கள் எனக்கு கொடுத்த நினைவுகளும் அன்பும், என்னும் என்னை முன்னோக்கி அழைத்துச் செல்லும்” என நடிகர் சூர்யா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Scroll to load tweet…