நடிகர் மன்சூர் அலிகான் அந்தர் பல்டி... தொண்டாமுத்தூரில் போட்டியிட உறுதி.. மன்சூர் மனதை மாற்றிய அந்த அறிவுரை..!
தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடுவலிருந்து விலகுவதாக அறிவித்திருந்த நடிகர் மன்சூர் அலிகாம், தனது முடிவை திரும்ப பெற்றுக்கொண்டார்.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் திமுக சார்பில் கார்த்திகேய சேனாபதி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இந்தத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக நடிகர் மன்சூர் அலிகானும் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். கடந்த சில நாட்களாக அவர் பாணியில் பிரசாரம் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிறன்று தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார்.
இதுகுறித்து மன்சூர் அலிகான் கூறுகையில், “நான் பணம் வாங்கிக்கொண்டு போட்டியிடுவதாக பலரும் பேசுகிறார்கள். தேர்தலில் போட்டியிட்டு மக்களிடம் கெட்ட பெயர் எடுப்பதற்குப் பதிலாக போட்டியிலிருந்து விலக முடிவெடுத்து விட்டேன். எனவே, வேட்புமனுவை வாபஸ் பெற உள்ளேன். இந்த முடிவு மனதுக்கு மிகவும் கஷ்டமாகத்தான் உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான நேற்றைய தினம், மன்சூர் அலிகான தனது வேட்புமனுவை வாபஸ் பெறுபார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சின்னத்தை கேட்டுப்பெறுவதற்காக கோவை பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு மன்சூர் அலிகான் வந்தார். அப்போது அவர் கூறுகையில், “எங்கே சென்றாலும் பணம் வாங்கினீர்களா என வேண்டுமென்றே கேட்கவைத்து, என்னை சோர்வடையச் செய்தனர். என்னை இங்கிருந்து அனுப்ப திட்டம் போட்டனர். தேர்தல் பணிமனைக்கு இடம் கிடைக்கவிடாமல் தடுத்தனர். மேலும், தேர்தல் பிரச்சார வாகனத்துக்கான அனுமதி அளிக்க தாமதிக்கின்றனர்.
என்னுடைய மகள் வெற்றியோ தோல்வியோ களத்தில் இறங்கி முடித்த பிறகு திரும்புங்கள் என்று சொன்னார். அது எனக்கு உற்சாகமாக இருந்தது. இப்போது மக்களை நம்பி களத்தில் இறங்கிவிட்டேன். அதைவிட்டுக்கொடுக்க மாட்டேன். தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன். தொண்டாமுத்தூர் தொகுதியில் விவசாயிகளுக்கு வருமானம் அளிப்பது தென்னை மரங்கள். எனவே, தென்னந்தோப்பு சின்னம் கேட்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.