கோவை மாவட்டம் சூலூரில் உள்ள அரசு பள்ளியின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு நடிகர் கார்த்தி பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Karthi Donate 5 Lakh Rupees to Government School : கோவை மாவட்டத்தில் உள்ள சூலூரில் ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் இன்று நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் நடிகர் சிவக்குமார் கலந்துகொண்டார். அவரும் இந்த அரசுப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் தான். அவருடன் அவரது இரண்டாவது மகனும், நடிகருமான கார்த்தி, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுச்சாமி ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்துள்ளது - கார்த்தி பேச்சு

கோலாகலமாக நடைபெற்ற இந்த விழாவில் பள்ளியில் பயின்று பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும், பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. அதேபோல் இந்தப் பள்ளியில் படித்து, இன்று பல்வேறு துறைகளில் சாதித்த முன்னாள் மாணவர்களும் கெளரவிக்கப்பட்டனர். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி, வெளிநாடுகளில் உள்ள பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்து இருக்கிறது என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் தான் உயர்தரக் கல்வி வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களே இன்று சிறந்து விளங்குகிறார்கள். என்னுடைய தந்தை கல்வி ஒழுக்கம் மூலம் வாழ்க்கையில் சாதித்து காட்டி இருக்கிறார். அரசு பள்ளிகளில் 65 லட்சம் பேர் படிக்கிறர்கள் என்றால் தனியார் பள்ளியில் 40 லட்சம் பேர் பயில்கிறார்கள். இதனால் அரசு பள்ளியை நம்பி தான் பெரும்பாலானோர் உள்ளனர்.

கண் கலங்கிய நடிகர் கார்த்தி

தமிழ்நாட்டில் கிராமப்புற மாணவர்களின் ஒரே நம்பிக்கையாக இருப்பது அரசு பள்ளிகள் மட்டும் தான். அன்றைய காலகட்டத்தில் என் அத்தையின் பள்ளிச் செலவுக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலை இருந்திருக்கிறது. இதனால் அவங்க ரொம்பவே கஷ்டப்பட்டாங்க என்று சொல்லும்போது மேடையிலேயே கண் கலங்கினார் கார்த்தி.

இதையடுத்து அங்கிருந்த சிவக்குமார், அவரை ஆறுதல் செய்து அமர வைத்தார். பின்னர் சூலூர் அரசு பள்ளிக்கு 5 லட்சம் ரூபாய் நன்கொடை அளிப்பதாக கார்த்தி மேடையில் அறிவித்தார். அவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.