தந்தையின் நினைவு தின சடங்கில் பங்கேற்க 2 மணி நேர பரோலில் வந்தார் நடிகர் திலீப்…
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் திலீப் 2 மாதங்களுக்குப் பின் பரோலில் வெளியே வந்துள்ளார்.
மலையாள நடிகையை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக, நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் அலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
2 மாதங்களுக்கு மேலாக சிறையில் இருந்து வரும் திலீப் தனது தந்தையின் நினைவு தின சடங்கில் பங்கேற்பதற்காக பரோல் கோரியிருந்தார்.
இதை ஏற்று திலீப்பிற்கு 2 மணி நேரம் பரோல் வழங்கி அலுவா மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி ஏறக்குறைய 2 மாதங்களுக்கு பிறகு நடிகர் திலீப் சிறையில் இருந்து இன்று காலை வெளியே வந்துள்ளார்.
2 மணி நேரம் மட்டுமே பரோல் வழங்கப்பட்டு இருப்பதால் இன்றே அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார்.
பரோலில் வெளியே வந்திருக்கும் சமயத்தில் திலீப் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விசாரணை அதிகாரியின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் என்றும், நீதிமன்ற உத்தரவை எக்காரணம் கொண்டும் மீறக்கூடாது எனவும் திலீப்பிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.