"அவளுடன் நானும் இறந்துவிட்டேன்".. மகள் மீராவின் மரணம் - விஜய் ஆண்டனி வெளியிட்ட உருக்கமான பதிவு!
தமிழ் சினிமாவின் முன்னை நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்களின் மூத்த மகள் மீரா விஜய் ஆண்டனியின் மறைவு தமிழக அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தனது மகளுக்காக ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார் விஜய் ஆண்டனி.

தமிழ் சினிமாவில் அறிமுகமான அடுத்த ஆண்டே விஜய் ஆண்டனி, தொகுப்பாளினியான பாத்திமா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு மீரா மற்றும் லாரா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் தான் மூத்த மகள் மீரா, கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி, அதிகாலை 3 மணியளவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வெறும் 16 வயதே நிரம்பிய மீரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தமிழ் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீராவின் உடல், நுங்கம்பாக்கத்தில் உள்ள தேவாலயத்தில் நேற்று புதன்கிழமை காலை இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அதன் பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜய் ஆண்டனி கிறிஸ்தவர் என்பதால் அவரின் குடும்ப வழக்கப்படி, தேவாலயத்தில் தான் மீராவின் இறுதி சடங்குகள் நடந்தது.
திரையுலகினர் அனைவரிடமும் நட்பு பாராட்டும் மனம் படைத்த விஜய் ஆண்டனி மகள் இறப்பு குறித்து அறிந்ததுமே, அனிருத் ரவிச்சந்தர்,விஷால், ஹரீஷ் கல்யாண், பரத், ராதிகா, உள்ளிட்ட பல பிரபலங்கள் விஜய் ஆண்டனி மகளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியது மட்டும் இன்றி, விஜய் ஆண்டனிக்கு தங்களின் ஆறுதலையும் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் மகளின் இறப்பு குறித்து ஒரு பதிவினை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விஜய் ஆண்டனி அதில் "அன்பு நெஞ்சங்களே.. என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்கு தான் சென்று இருக்கிறாள். என்னிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரில் நான் செய்யப் போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள்" என்று எழுதி தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.