விவசாயத்திற்காக 5000 மாணவர்களுடன் இணைந்து நடிகர் ஆரி உலகசாதனை நிகழ்ச்சி...
மாலை பொழுதின் மயக்கத்திலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் கொடுத்தவர் நடிகர் ஆரி. தற்போது பல படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
இவர் நடிப்பில் எந்த அளவிற்கு ஆர்வம் காட்டி வருகிறாரோ அதே போல், கடந்த சில வருடங்களாக சமூக அக்கறை கொண்ட சில விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார்.
ஏற்கனவே... ஜல்லிக்கட்டு போராட்டம், நெடுவாசல் போராட்டம், மற்றும் விவசாயிகள் பிரச்சனைக்காக குரல் கொடுத்த இவர், தற்போது விவசாயத்தின் பெருமையை மாணவர்கள் தெரிந்துக்கொள்ளும் விதத்தில் உலக சாதனை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.
நடிகர் ஆரி நடத்தி வரும் 'மாறுவோம் மாற்றுவோம்' அறக்கட்டளை சார்பில் 'நானும் ஒரு விவசாயி' எனும் கின்னஸ் உலக சாதனைக்காக 5000 மாணவர்கள் பங்கேற்று நாற்று நடும் நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் நல்லநிலம், ஆவணிப்பூர், திண்டிவனம் ஆகிய இடத்தில் நடைபெற்றது .
இதில் மாணவர்கள் கலந்துக்கொண்டு நாற்று நட்டனர். அந்தந்த கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். நாளைய சமூகத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதால் பொதுமக்கள் பலரும் இதனை வரவேற்றுள்ளனர்.