நடிகை ஜெயபிரதாவின் உள்ளாடை குறித்து பொதுக்கூட்டத்தில் கொச்சையாகப் பேசிய வேட்பாளர்...
”இது போன்ற சர்ச்சை எனக்கு புதிதல்ல. ஏற்கனவே கடந்த 2009ம் ஆண்டு சமாஜ்வாடி கட்சியில் வேட்பாளராக இருந்தேன். ஆனால் ஒருவர் கூட ஆசம் கூறியது தவறு என எதிர்த்தும், என்னை ஆதரித்தும் பேசவில்லை. நான் ஒரு பெண்ணாக இருப்பதால் அவர் என்ன கூறினார் என்பதைகூட திரும்ப சொல்ல இயலவில்லை. நான் ஆசமிற்கு என்ன செய்தேன்? ஏன் இவ்வாறு பேச வேண்டும்?
உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கான் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது ஜெயப்பிரதா பெயரை நேரடியாக குறிப்பிடாமல் , “இங்கு 10 வருடங்களாக ஒருவர் மக்கள் பிரதிநிதியாக இருந்தார். ராம்பூர் மக்கள், உத்தர பிரதேச மக்கள் மற்றும் இந்திய மக்கள் அவரை புரிந்துகொள்ள 17 ஆண்டுகள் ஆனது. ஆனால், அவர் காக்கி உள்ளாடை அணிந்திருப்பதை 17 நாட்களில் அறிந்துகொண்டேன்” என்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆசம் கான் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவும், ஆசம் கானின் கருத்து மிகவும் அருவருப்பான அவமானகரமான கருத்து என பாஜக செய்தித் தொடர்பாளர் சந்திர மோகனும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து ஆசம் கான் கூறிய சர்ச்சை கருத்து தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜெயப்பிரதா,”இது போன்ற சர்ச்சை எனக்கு புதிதல்ல. ஏற்கனவே கடந்த 2009ம் ஆண்டு சமாஜ்வாடி கட்சியில் வேட்பாளராக இருந்தேன். ஆனால் ஒருவர் கூட ஆசம் கூறியது தவறு என எதிர்த்தும், என்னை ஆதரித்தும் பேசவில்லை. நான் ஒரு பெண்ணாக இருப்பதால் அவர் என்ன கூறினார் என்பதைகூட திரும்ப சொல்ல இயலவில்லை. நான் ஆசமிற்கு என்ன செய்தேன்? ஏன் இவ்வாறு பேச வேண்டும்?
ஆசம் நிச்சயமாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும். ஒரு வேளை அவர் வெற்றி பெற்றால் ஜனநாயகம் என்ன ஆகும்? என சிந்தியுங்கள். சமூகத்தில் பெண்களுக்கென இடமே கிடைக்காது. நாங்கள் உரிமைக்காக எங்கே போக வேண்டும்? நான் இறந்தால் நீங்கள் திருப்தியாக இருப்பீர்களா? இப்படி பேசியதால் நான் பயந்து ராம்பூரை விட்டு சென்றுவிடுவேன் என நீங்கள் நினைத்தால், நான் அவ்வாறு செய்யமாட்டேன்’என்றார் ஜெயப்ரதா.
இந்நிலையில் ஜெயப்பிரதா குறித்து அவதூறாகப் பேசியதற்காக ஆசம்கான் மீது உத்தரபிரதேச போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தேசிய மகளிர் ஆணையமும் விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் பாஜக வேட்பாளர் ஜெயப்பிரதா குறித்து நான் ஆட்சேபனைக்குரிய வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. நான் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு பேசவில்லை’ என்று ஆசம் கான் மறுத்துவருகிறார்.