ஆர்த்தி குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பேசி வரும் சுசித்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்த்தியின் தந்தை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
கெனிஷா - ரவி மோகன் பிரச்சனை
பாடகி கெனிஷாவுக்கும், ரவி மோகனுக்கும் தொடர்பு இருப்பதாகவும், இதனால் ரவி மோகன் ஆர்த்தி திருமண வாழ்க்கையில் பிரச்சனை நீடிப்பதாகவும் சில காலமாகவே தகவல் வெளியாகிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் நடிகர் ரவி மோகன் சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பாடகி கெனிஷா உடன் கலந்து கொண்டார். இதன் பின்னர் பிரச்சனை பூதாகரமானது.
ஆர்த்தி மீது சுசித்ரா விமர்சனம்
தொடர்ந்து ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இருவரும் சமூக வலைதளங்களில் கடுமையான வார்த்தைகளை பரிமாறிக் கொண்டனர். ஒருகட்டத்தில் ரவியும் ஆர்த்தியும் பிரிந்து விட்டதாக அறிவித்தனர். நடிகர் ரவி மோகன் ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் பாடகி சுசித்ரா ஆர்த்தியை பிரபல நடிகருடன் இணைத்து பேசியிருந்தார். சுசித்ராவின் இந்த பேச்சு மீண்டும் சர்ச்சையை கிளப்பியது.
சுசித்ரா மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
இந்த நிலையில் சுசித்ரா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்த்தியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி விஜயகுமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், “சுசித்ராவின் ஆபாசமான, தவறான கருத்துக்கள் என் மகள் மற்றும் மனைவியின் கண்ணியத்தை பாதிக்கின்றன. என்னைப் பற்றியும், என் குடும்பத்தைப் பற்றியும் அவர் வெளியிட்டுள்ள வீடியோக்கள் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. எங்களின் கண்ணியத்தையும் கேள்வி குறியாக்கி உள்ளன. பல வருடங்களாக கடின உழைப்பால் நாங்கள் சம்பாதித்த இந்த கண்ணியத்தை, சுசித்ரா ஒரு நிமிடத்தில் உடைத்து விட்டார். எனவே சுசித்ரா மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
