25 ஆண்டுகளுக்கு முன் வெளியான ஹாலிவுட் படம் ஒன்றின் ரீமேக்கில், முறைப்படி அனுமதி வாங்கி  நடிக்கவிருக்கும் ஆமிர்கான் அதற்காக தனது உடல் எடையை 20 கிலோ வரை குறைக்கிறார்.

25 ஆண்டுகளுக்கு முன் வெளியான ஹாலிவுட் படம் ஒன்றின் ரீமேக்கில், முறைப்படி அனுமதி வாங்கி நடிக்கவிருக்கும் ஆமிர்கான் அதற்காக தனது உடல் எடையை 20 கிலோ வரை குறைக்கிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

டாம் ஹாங்ஸ் நடிப்பில், ராபர்ட் ஜெமிக்கிஸ் இயக்கத்தில் 1994-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump). 1986ல்- வின்ஸ்டன் க்ரூம் எழுதிய நாவலின் அடிப்படையில் உருவான படம் இது. ஹாலிவுட்டில் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்று என பெயர் பெற்று, உலகளவில் எண்ணற்ற ரசிகர்களைக் கொண்ட திரைப்படம்.

இன்றளவும் இந்தப் படத்தின் வசனங்களும், காட்சிகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த தழுவல் திரைக்கதை, சிறந்த கிராபிக்ஸ், சிறந்த படத்தொகுப்பு உள்ளிட்ட பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளையும் இப்படம் அள்ளியது. ‘93ல் ‘பிலடெல்ஃபியா’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது வாங்கியிருந்த டாம் ஹாங்ஸ், அதற்கு அடுத்த ஆண்டும் தொடர்ச்சியாக ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்துக்கும் அதே விருதைத் தட்டிச்சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் தான் நடிக்கவுள்ளதாக நடிகர் ஆமிர்கான் தெரிவித்துள்ளார். ஆமிர்கானின் 54-வது பிறந்தநாளை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அதில் பேசுகையில், "எனது அடுத்த படம் என்னவென்பது உறுதியாகிவிட்டது. அதன் பெயர் 'லால் சிங் சட்டா'. வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் மற்றும் ஆமிர்கான் ப்ரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. அத்வைத் சந்தன் இயக்கவுள்ளார். இது ஹாலிவுட் திரைப்படமான ஃபார்ரஸ்ட் கம்பை தழுவி எடுக்கப்படும். பாராமவுண்ட் நிறுவனத்திடமிருந்து முறைப்படி உரிமைகளை வாங்கியுள்ளோம். நான் லால் சிங் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளேன். 

படத்தின் முன் தயாரிப்பு வேலைகள் துவங்கிவிட்டன. படப்பிடிப்பு அக்டோபரில் ஆரம்பமாகும். நான் 6 மாதங்கள் முன் தயாரிப்புக்கு எடுத்துக் கொள்கிறேன். 20 கிலோ எடை குறைக்க வேண்டும். ஒல்லியாகவேண்டும். எனக்கு ஃபார்ரஸ்ட் கம்ப் படத்தின் திரைக்கதை எப்போதுமே பிடித்தமான ஒன்று. இது ஒரு கதாபாத்திரத்தைப் பற்றிய அற்புதமான கதை. வாழ்வில் நம்பிக்கை தரக்கூடிய கதை. நல்ல உணர்வைத் தரும் படம். மொத்த குடும்பத்துக்குமான படம் அது" என்றார்.