Accident : திருத்தணி.. பைக் மீது மோதிய கார் - நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்ற கணவன், மனைவி பலியான கொடூரம்!

May 19, 2024, 9:18 PM IST

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ள பட்டாபிராமபுரம் பஞ்சாயத்து செல்லும் புதிய பை-பாஸ் பகுதியில் சென்று கொண்டு இருந்த கார், திடீரென்று அந்தப் பகுதியில் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க துரிதமாக பிரேக் பிடித்துள்ளார். இதனால் கார் தேசிய நெடுஞ்சாலையில் சட்டென திரும்பியதால் பின்னால் வந்த இருசக்கர வாகனம், காரின் பக்கவாட்டில் நேருக்கு நேர் மோதியது.

இதனால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் படுகாயம் அடைந்தனர், அந்த பகுதியில் இருந்த பொதுமக்களும், கார் ஓட்டுனரும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தனர். 

திருத்தணி அரசு மருத்துவமனையில் அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வந்த நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இறந்தவர்கள் இருவரும் ஒரு நிச்சயதார்த்த நிகழ்விற்கு சென்றுகொண்டிருந்த கணவன் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

கார் ஓட்டுநர் திருத்தணி அருகில் உள்ள கே.ஜி கண்டியை சேர்ந்த இளங்கோவன், அவர் தனது காரில் பயணித்தபோது எதிர்பார்த்த விதமாக இந்த  விபத்து நேர்ந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கார் ஓட்டுனர் இளங்கோவன் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்தில் மரணம் அடைந்த கணவன் மற்றும் மனைவி சென்னை அருகில் உள்ள ஆவடி பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.