என்ன ஒரு மனசு.. 3 மாத குட்டியானைக்கு உணவளித்து 5 மணிநேரம் போராடி தாயுடன் சேர்த்த வனத்துறையினர்.!

Apr 7, 2024, 11:04 AM IST

கோவை பெரியநாயக்கன் பாளையம் வனப்பகுதியில் தாயிடம் இருந்து பிரிந்த 3 மாத குட்டியானையை மீட்டு உணவளித்து, மீண்டும் தாய் யானையிடம் வனத்துறையினர் சேர்த்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்க்கு உட்பட்ட நாயக்கன்பாளையம் கோவனூர் வனப்பகுதியில் மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை ஒன்று கூட்டத்திலிருந்து பிரிந்து அருகில் உள்ள விவசாய பகுதியில் சுற்றி வந்தது.  தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று குட்டி யாணையை மீட்டு யானை கூட்டத்துடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் 

பிரிந்த குட்டி யானைக்கு இளநீர் குல்கோஸ், பால் பவுடர் ஆகியவற்றை கொடுத்து வந்து யானையை மீண்டும் அதன் கூட்டத்துடன் இணைக்க  வனத்துறையினர் ஈடுபட்டனர். வனச்சரக ஊழியர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து  தாயை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். 

அப்போது  வனப்பகுதி ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதி அருகே நான்கு பெண் யானைகள் புளியந்தோப்பில் இருப்பதை கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் சுமார் 5 மணிநேரம் போராடி  குட்டியானையை மீண்டும் அதன் தாயுடன் சேர்த்து வைத்தனர்.