Police : கேவலமா இருக்கு.. டிஸ்மிஸ் செய்திடுவேன்- டிராபிக் போலீசை வாக்கி டாக்கியில் வறுத்தெடுத்த சுதாகர் ஐபிஎஸ்

Jul 24, 2024, 1:46 PM IST

வாகன ஓட்டிகளிடம் லஞ்சம்

வாகன விதிமுறைகள் மீறும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். இதில் லஞ்சம் வாங்குவதை தடுக்க ஆன்லைன் மூலம் பணம் கட்டும் நடைமுறையானது அமல்படுத்தப்பட்டது. இந்தநிலையில் சென்னை வேப்பேரி பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் விதிகளை மீறும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன உரிமையாளர்களிடம்  எதாவது ஒரு காரணத்தைக்கூறி அபராதம் விதிப்பதாக எச்சரித்து அவர்களின் பணம் வசூலித்து வந்தனர். நேரடியாக கையில் பணம் வாங்காமல் அங்குள்ள மஞ்சள் பையில் பணத்தை போடும்படி மிரட்டியுள்ளனர். இதனையடுத்து வாகன ஓட்டிகளும் வேறு வழியின்று  மஞ்சள் பையில் பணத்தை போட்டுவிட்டு சென்றனர். இந்த காட்சி  சமூக வலைதளத்தில் வீடியோவானது வெளியானது. 

 வாக்கி டாக்கியில் எச்சரிக்கை

இந்த வீடியோவை பார்த்த போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் சென்னையில் உள்ள அனைத்து போக்குவரத்து காவல்துறையினருக்கும் வாக்கி டாக்கியில்  எச்சரித்துள்ளார். இது தொடர்பாக வாக்கி டாக்கியில் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், வாகன சோதனையின் பொழுது ஏதேனும் புகார்கள் போலீசார் மீது வந்தால் அவர்களை சஸ்பெண்ட் அல்லது டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்.

ரொம்ப அசிங்கமாக இருக்கு

டிராபிக்கில் பணம் வாங்குவதற்காகவே வேலையில் இருந்தால் வெளியே சென்று விடுங்கள். ஒருவரால் மொத்த டிராபிக் துறைக்கே கெட்ட பெயர் வாங்கி கொடுக்காதீர்கள்.  ஒரு சில செய்திகளை பார்க்கும் பொழுது மிகவும் அசிங்கமாக உள்ளது. டிராபிக் போலீசார் மீதுள்ள மரியாதையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒரு படி மேலே சென்றால் 4 படி கிழே இறங்குகிறது. இது நல்லதல்ல. இது கடைசி எச்சரிக்கை. அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய உதவி ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் கண்டித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்காத பட்சத்தில் உதவி ஆணையர் மற்றும் துணை ஆணையர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுதாகர் ஐபிஎஸ் எச்சரித்துள்ளார்.