விருதுநகரில் ரூ.4.70 லட்சம் மதிப்பிலான 3,379 மதுபாட்டில்கள் அழிப்பு

May 4, 2023, 9:59 AM IST

விருதுநகர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரால் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர் காவல் உட்கோட்ட பகுதிகளில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பல்வேறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, அருப்புக்கோட்டை, சிவகாசி பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ரூ.4.70 லட்சம் மதிப்பிலான 3 ஆயிரத்து 379 மது பாட்டில்கள் விருதுநகர் கொண்டுவரப்பட்டன. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாக பின்புறத்தில் கலால் துறை உதவி ஆணையர் அமிர்தலிங்கம் தலைமையில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு எஸ்.ஐ. ஞானசேகரன் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் பாட்டில்களிலிலிருந்த மது கீழே கொட்டி அழிக்கப்பட்டது.