சந்திரபாபு நாயுடு கைது: எல்லையில் தொடரும் பதற்றம்.. தமிழக பேருந்துகள் நிறுத்தம் !!

Sep 10, 2023, 12:14 PM IST

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தற்போதைய குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, அவரது ஆட்சிக் காலத்தில் ஆந்திர மாநில இளைஞர் மேம்பாட்டு துறையில் சுமார் 240 கோடி வரை ஊழல் செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் நேற்று இரவு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவின் கைதை கண்டித்து அவரது ஆதரவாளர்களும், தெலுங்கு தேச கட்சியின் தொண்டர்கள் ஆந்திர மாநிலத்தில் பல்வேறு இடங்களில் சித்தூர்,குடிபாலா உள்ளிட்ட பல இடங்களில் தெலுங்குதேசம் கட்சியினர் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.  சில இடங்களில் பேருந்துகள் தாக்கப்பட்டுள்ளது. 

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திராவுக்கு இயக்கப்படும் தமிழக மற்றும் ஆந்திர பேருந்துகள் அனைத்தும் அந்தந்த பேருந்து நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆந்திராவிலிருந்து தமிழகம் வரும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டு போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் இருந்து வேலூர் வழியாக ஆந்திர மாநிலத்துக்கு இயக்கப்படும் 40 தமிழக அரசு பேருந்துகள்.63 ஆந்திர மாநில அரசு பேருந்துகள் 27 தனியார் பேருந்துகள் என தற்போதைக்கு மொத்தம் 130 பேருந்துகள் ஆந்திராவிற்கு இயக்கப்படவில்லை. தொடர் சாலைமறியல்களும், போராட்டங்களும் நடப்பதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

“அன்னைக்கே சொன்னேன்.. மாரிமுத்து செஞ்ச ஒரே தப்பு இதுதான்” ஜோதிடர் கிளப்பிய சர்ச்சை.. பரபரப்பு பேட்டி