பயணிகள் முகம் சுளிக்கும் வகையில் நடந்துகொண்ட மாணவர்கள்; அரசுப் பேருந்தில் அதிரடி காட்டிய பெண் போலீஸ்

Sep 27, 2023, 11:19 AM IST

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களுடைய ஊருக்கு செல்ல பேருந்து படிக்கட்டில் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணிக்கின்றனர். இதனை கட்டுப்படுத்த வேண்டும் என புகார் எழுந்தது. மேலும் கல்லூரி மாணவ, மாணவிகள் அரசு பேருந்துகளில் ஒன்றாக அமர்ந்து சில்மிஷங்களில் ஈடுபடுவதாகவும், இதனால் பொதுமக்கள் அசௌகரியமான முறையில் பயணம் செய்து வந்தனர்.

இது தொடர்பாக தொடர்ந்து புகார் எழுந்து வந்த நிலையில், திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ரூபி அரசு பேருந்துக்கு சென்று கல்லூரி மாணவ, மாணவிகள் ஒன்றாக பயணிப்பவர்களுக்கு இதுபோல் மற்றவர்களுக்கு முகம் சுளிக்கும் வண்ணம் மாணவர்கள் நடந்து கொள்ளக் கூடாது. மாணவ, மாணவிகள் படிப்பை மட்டும் முக்கியத்துவமாக கருத வேண்டும். உங்கள் வாழ்க்கையை வீணாக்காதீர்கள் என்று அறிவுரை வழங்கினார்.  

மேலும் ஒன்றாக அமர்ந்திருந்த மாணவ, மாணவியரை தனித்தனியாகவும் அமர வைத்தார். மேலும் இதுபோல் மற்றவர்களுக்கு முகம் சுளிக்கும் வண்ணம் நடந்து கொள்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் எச்சரித்தார்.