ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா; பெரம்பலூரில் மாறுவேடத்தில் வாக்கு சேகரித்த திமுக பிரமுகர்

Mar 19, 2024, 4:53 PM IST

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் அருண்நேரு, பாஜக சார்பில் தற்போதைய எம்பி பாரிவேந்தரும் களம் காண்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. அதிமுக சார்பில் வேட்பாளர் யாரை அறிவிப்பார்கள் என அக்கட்சியினர் எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சியினர் தொடங்கியுள்ளனர்.

இதனிடையே ஒருசில பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியும் சூடு பிடித்து வருகிறது. அதன்படி பெரம்பலூர் துறைமங்களத்தில் குறிசொல்லும் வேடம் அணிந்த நபர் திமுகவிற்கு வாக்கு சேகரித்தார். திமுக அரசின் திட்டங்களை கூறி வாக்கு சேகரித்ததுடன் பாஜகவிற்கோ மற்ற கட்சிகளுக்கோ வாக்களித்தால் வேலைவாய்ப்பின்மை போன்றவை பெருகும் என குறிசொல்வது போல் குடுகுடுப்பை அடித்து வாக்கு சேகரித்தார். அப்போது பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த வாக்குசேகரிப்பு முறை அப்பகுதிவாசிகளை வெகுவாக கவர்ந்தது.