இன்று காலை தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு துவங்கியது. முதல் ஆளாக காலை 6.45 மணிக்கே வாக்குச்சாவடிக்கு வந்த அஜித் திருவான்மியூர் பள்ளியில் வாக்களித்துவிட்டு சென்றார் என்பதை பார்த்தோம். அந்த வகையில் பிரபலங்கள் காலையிலேயே, தாங்கள் வாக்களிக்க உள்ள வாக்கு சாவடிக்கு சென்று வாக்களித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் தனுஷ் சென்னை, டிடிகே சாலையில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் காலை 8 மணியளவில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
அதே போல் பிரபல நடிகரும், இயக்குநருமான சசிகுமார் தன்னுடைய சொந்த ஊரான மதுரை புதுதாமரைப்பட்டி வாக்குசாவடியில் வாக்களித்தார்.
பிரபல நடிகை ராதிகா சரத்குமார், சரத்குமார், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடியில் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.
தல அஜித் திருவான்மியூர் பாரதிதாசன் தெருவில் உள்ள மேல்நிலைப் பள்ளியில், வாக்களிப்பதற்காக சரியாக 6.45 மணிக்கே வந்து காத்திருந்து, சரியாக 7 மணிக்கு வாக்களிப்பு துவங்கியதும் முதல் ஆளாக தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றினார்.
நடிகை குஷ்பூ, தன்னுடைய கணவர் சுந்தர் சி, மகள்கள் அவந்திகா மற்றும் அனந்திடாவுடன் வந்து... சென்னை மந்தைவெளி பகுதியில் அமைந்துள்ள ராஜலட்சுமி மெட்ரிக் பள்ளியில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார்.
இயக்குனர் மோகன் ஜி, வளசரவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில்... இன்று காலை 8 மணியளவில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று தன்னுடைய வாக்கினை செலுத்தினார்.
அதே போல் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள், தன்னுடைய வீடு அமைந்துள்ள தி.நகர் பகுதிக்கு அருகாமையில் உள்ள ராமகிருஷ்ணா நர்சரி பள்ளியில், இன்று காலை 8:30 மணியளவில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார்.
நடிகர் வையாபுரி தனது மகனுடன் இணைந்து, வளசரவாக்கம் வேளாங்கண்ணி பள்ளியில் காலை 7' மணிக்கு முதல் ஆளாக வாக்களித்தார். இந்த முறை வையாபுரியின் மகள் முதல் முறையாக வாக்களிக்க உள்ளதாகவும், கட்டாயம் அனைவரும் வாக்களிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது மனைவியுடன் வந்து வரிசையில் காத்திருந்து வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இவர், நமது வாக்கு நமது உரிமை, வாக்களிப்பது நமது கடமை. ஆபிரகாம் லிங்கன் கூறியதுபோல் புல்லட்டை விட வலிமை வாய்ந்தது வாக்கு. வாக்கு செலுத்தினால்தான் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க முடியும். அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.