நடிகர் சூரி, சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தனுடன் இணைந்து... கதையின் நாயகனாக நடித்துள்ள 'கருடன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை டீஸர் வெளியிட்டு அறிவித்துள்ளது படக்குழு.
இயக்குநர் R S. துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி 'விடுதலை' படத்தை தொடர்ந்து கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'கருடன்'. இவருடன் சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ஷிவதா நாயர், மைம் கோபி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுத, ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். பிரதீப் ஈ. ராகவ் படத்தொகுப்பு பணிகளை கையாள, ஜி. துரைராஜ் கலை இயக்க பொறுப்பை ஏற்றிருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டு... படக்குழு இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி 'கருடன்' திரைப்படம் இந்த மாதம், மே 31-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சூரி சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தனின் நம்பிக்கையை பெற்ற வேலைக்காரனாக நடித்துள்ளார். ஏற்னவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் போன்றவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று, படம் மீதான... ஆவலை தூண்டியது குறிப்பிடத்தக்கது.