பிப்ரவரி 13ஆம் தேதி பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்கிறார். இருநாட்டு உறவு, வர்த்தகம், மேற்கு ஆசியா, உக்ரைன் மற்றும் உலக அமைதி குறித்து இருவரும் பேசுவார்கள்.

பிரதமர் மோடி பிப்ரவரி 13ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். அங்கு அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்கும் மோடி இருநாடுகளுக்கும் இடையிலான உறவு மற்றும் வர்த்தகம் குறித்தும் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20ஆம் தேதி இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தொலைபேசி மூலம் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து கடந்த மாதம் இறுதியில் தொலைபேசியில் இருவரும் உரையாடினர். அப்போது பேட்டியளித்து இருந்த டொனால்ட் டிரம்ப் விரைவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பேன் என்று கூறி இருந்தார்.

வெளிநாட்டுத் தலைவர்களில் முக்கியமானவர் மோடி:
இந்த நிலையில்தான் இருநாட்டு தலைவர்களும் வரும் பிப்ரவரி 13ஆம் தேதி வாஷிங்டனில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளும் உறுதிபடுத்தியுள்ளனர். டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர் பிரதமர் மோடி மேற்கொள்ளும் அதிகாரபூர்வ பயணமாக இது இருக்கும். டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன் உலகளவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முக்கிய தலைவர்களில் ஒருவராக மோடி கருதப்படுகிறார்.

மோடியின் அமெரிக்க பயணம் எப்போது?
பிரதமரின் பயணம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ''அமெரிக்கா, இந்தியா இடையே உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்தில் இரண்டு நாடுகளும் இருநாட்டு தலைவர்களின் சந்திப்பை முன்னிலைப்படுத்தி வருகின்றனர். எந்த தேதியில் பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார் என்பது குறித்து இன்னும் சரியான தேதி முடிவு செய்யவில்லை. ஆனால், பிரதமர் பிப்ரவரி 12 முதல்14 ஆம் தேதி வரை அமெரிக்க பயணத்தை மேற்கொள்கிறார் என்று பிடிஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

இந்தியர்களை வெளியேற்ற தொடங்கிய அமெரிக்கா; டொனால்ட் டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை

குவாட் உச்சி மாநாடு:
அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்கும்போது, மேற்கு ஆசியா, உக்ரைன் மற்றும் உலக அமைதிக்கான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி பேசுவார் என்று கூறப்படுகிறது. நடப்பாண்டு இறுதியில் குவாட் உச்சி மாநாடு இந்தியாவில் நடக்கிறது. இந்த மாநாட்டில் டொனால்ட் டிரம்ப் கலந்து கொள்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இந்தியர்களுக்கு விசா:
அமெரிக்காவில் இந்தியர்கள் சட்ட விரோதமாக குடிபெயர்ந்து இருப்பது, இந்தியர்களுக்கு விசா வழங்குவது ஆகியவை குறித்து ஏற்கனவே அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் அமைச்சர் ஜெய்சங்கர் பேசி இருக்கிறார். இதுகுறித்து பிரதமரும் டொனால்ட் டிரம்புடன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தோ பசிபிக் சந்திப்பின் பின்னணி:
இந்தோ பசிபிக் நாடுகளில் இருந்து டிரம்பை சந்திக்க இருக்கும் முதல் தலைவராக மோடி இருக்கிறார். ஏன் முக்கியத்துவம் என்று கேட்கத் தோன்றும். டிரம்பின் முதல் ஆட்சியில் 2017ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டு இருந்தார். இந்தப் பயணம் இந்தோ பசிபிக் உறவு என்றுதான் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆசியா பசிபிக் என்று குறிப்பிடவில்லை. சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கத்தில் அவ்வாறு அழைக்கப்பட்டது. ஆசியப் பகுதிகளில் இந்திய பெருங்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இது பிலிப்பைன்ஸ் முதல் ஆசியாவின் அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதற்கு எதிராக உருவாக்கப்பட்டதுதான் குவாட் அமைப்பு. 

குவாட் அமைப்பு நாடுகள்:
இந்தோ பசிபிக் மண்டலங்களில் பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கு என்று கொண்டு வரப்பட்டது தான் குவாட் அமைப்பு. இந்த அமைப்பில் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கு என்று இந்தோ பசிபிக் மண்டலத்தில் உருவாக்கப்பட்ட அமைப்புதான் குவாட். 

டிரம்ப் மோடி நெருக்கம்:
டிரம்பின் முதல் ஆட்சியிலும் மோடியுடன் நெருக்கமாக இருந்தார். ஒவ்வொரு முறையும் தனது பேட்டியில் மோடியை டிரம்ப் புகழ்ந்து இருக்கிறார். ''சிறந்த மனிதர் மோடி'' ''டோட்டல் கில்லர்'' என்றெல்லாம் மோடியை டிரம்ப் புகழ்ந்து இருக்கிறார். சமீபத்தில் வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை மோடி கண்டித்து இருந்தார். அப்போது குரல் கொடுத்த டிரம்ப், இந்தியாவுடன், மோடியுடன் உறவை அமெரிக்கா வலுப்படுத்தும் என்று தெரிவித்து இருந்தார்.

அமெரிக்க பைக்குகளுக்கு வரி குறைப்பு; டொனால்ட் டிரம்ப் எதிர்ப்புக்கு பணிந்ததா இந்தியா?

இந்தியர்கள் திரும்ப பெறுதல்:
இதற்கிடையில் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடிபெயர்ந்து இருக்கும் 18,000 பேரை மோடி திரும்ப அழைத்துக் கொள்வார். அவருக்கு எது சரியானது என்பது தெரியும் என்று டிரம்ப் தெரிவித்து இருந்தார். சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்களை இந்தியாவுக்கு திரும்ப அழைத்துக் கொள்வது என்று மோடி அரசு முடிவு செய்த பின்னர் டிரம்ப் அவ்வாறு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.