- Home
- உலகம்
- Snake: வெள்ளத்தில் மிதந்து வந்த ஆயிரக்கணக்கான விஷப் பாம்புகள்.! அச்சத்தில் மக்கள்.! வைரலாகும் வீடியோ.!
Snake: வெள்ளத்தில் மிதந்து வந்த ஆயிரக்கணக்கான விஷப் பாம்புகள்.! அச்சத்தில் மக்கள்.! வைரலாகும் வீடியோ.!
900 Venomous Snakes Escape Flooded China Farm: மேசாக் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் தெற்கு சீனாவில் ஒரு பாம்புப் பண்ணையே அடித்துச் செல்லப்பட்டது. இதனால், ராஜநாகம் உட்பட சுமார் 900 விஷப் பாம்புகள் ஊருக்குள் தப்பி வந்துவிட்டன.

900 Venomous Snakes Escape Flooded China Farm
தென் சீனாவை 'மேசாக்' புயல் புரட்டிப் போட்டுள்ளது. புயலும் மழையும் ஓய்ந்தாலும், இப்போது ஊருக்குள் புகுந்த பாம்புகளால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். புயலைத் தொடர்ந்து பெய்த கனமழையால், குவாங்ஸி ஷுவாங் தன்னாட்சிப் பகுதியில் உள்ள ஹெங்ஷோ நகரில் ஒரு பாம்புப் பண்ணை வெள்ளத்தில் மூழ்கியது. பண்ணையில் இருந்த கூண்டுகள் உடைந்து, பாம்புகள் அனைத்தும் தப்பி ஊருக்குள் புகுந்தன. ஒன்றல்ல, இரண்டல்ல, சுமார் 900 பாம்புகள் தப்பித்ததாக அறிக்கைகள் கூறுகின்றன. இதில் ராஜநாகம், நல்ல பாம்பு, விரியன் போன்ற கொடிய விஷமுள்ள பாம்புகளும் அடங்கும்.
பயமுறுத்தும் வீடியோ
ஹெங்ஷோ நகரின் மீட்புப் படையினர் இப்போது நூற்றுக்கணக்கான பாம்புகளைப் பிடிக்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். அவர்களுடன் ஊர் மக்களும் மீட்புப் பணியில் கைகோர்த்துள்ளனர். ஜூலை 7-ம் தேதி சோஷியல் மீடியாவில் வெளியான ஒரு வீடியோ, இந்த பிரச்சனையின் தீவிரத்தை காட்டுகிறது. அந்த வீடியோவில், நகருக்கு அருகிலுள்ள வயலில் மக்கள் பெரிய வலைகளைப் பயன்படுத்தி வெள்ள நீரில் இருந்து பாம்புகளைப் பிடிப்பது தெரிகிறது. சில காட்சிகளில், சாலையோர வெள்ளத்தில் விஷப் பாம்புகள் கூட்டமாக நீந்திச் செல்வதையும் காண முடிகிறது.
பல பாம்புப் பண்ணைகள் காலி
ஹெங்ஷோ பண்ணையில் வெள்ளம் புகுந்தபோது, விஷப் பாம்புகள் உட்பட சுமார் 800 முதல் 900 பாம்புகள் வரை தப்பித்திருக்கலாம் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஒருவருக்கு பாம்பு கடித்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. லியுலான் மற்றும் யுன்பியாவோ நீர்த்தேக்கங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியதாகவும், இதனால் பல சிறிய பாம்புப் பண்ணைகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாம்புகளைப் பிடிக்க களமிறங்கிய அதிகாரிகள்
தப்பித்த பாம்புகளைப் பிடிக்க அதிகாரிகள் அவசரக் குழுக்களை களமிறக்கியுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்வதால், வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேசாக் புயலைத் தொடர்ந்து தெற்கு சீனாவின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

