வாஷிங்டன் டி.சி. அருகே அமெரிக்கன் ஈகிள் விமானம் 5342 மற்றும் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் மோதியதில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்புக்குழுக்கள் கடுமையான சூழ்நிலையில் போராடி வருகின்றனர்.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் அமெரிக்க ராணுவ பிளாக் ஹாக் ஹெலிகாப்டரும் நடுவானில் மோசமாக மோதிக்கொண்டு விபத்துக்கு உள்ளாகின. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அவசரகால மீட்புக் குழுக்கள் உடல்களை மீட்டெடுக்கும் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவகின்றனர். உயிர் பிழைத்தவர்கள் யாரும் இருக்க வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர். இதுவரை 28 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன..

புதன்கிழமை இரவு சுமார் 9 மணியளவில், 64 பேருடன் சென்ற அமெரிக்கன் ஈகிள் விமானம் 5342, ரொனால்ட் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவ பிளாக் ஹாக் ஹெலிகாப்டருடன் மோதியது. கன்சாஸ் மாகாணத்தின் விசிட்டாவிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உட்பட பல பயணிகள் இருந்தனர். அதே நேரத்தில் ராணுவ ஹெலிகாப்டரில் மூன்று பணியாளர்கள் இருந்தனர்.

இரண்டு விமானங்களும் மோதியதும் போடோமாக் நதியின் உறைபனி நீரில் விழுந்தன. உடனடி அவசரகால நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும், உயிர் பிழைத்தவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

பயணிகள் விமானத்திலிருந்து 27 உடல்களும், ராணுவ ஹெலிகாப்டரின் இடிபாடுகளில் இருந்து ஒரு உடலும் மீட்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதிகாரிகள் உறைபனி நிலையில் பணியாற்றி வருவதால் தேடுதல் கடினமாக உள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் பயிற்சி முகாமில் இருந்து திரும்பி வந்த அமெரிக்க ஃபிகர் ஸ்கேட்டர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்றுனர்கள் இருந்தனர். இரண்டு முன்னாள் உலக சாம்பியன் ஸ்கேட்டர்கள் விமானத்தில் இருந்ததாக ரஷ்ய ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன, இது விளையாட்டு சமூகத்திற்குள் உலகளாவிய அதிர்ச்சி மற்றும் துக்கத்தை மேலும் அதிகரிக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது இரங்கலைத் தெரிவித்து, “கடவுள் அவர்களின் ஆன்மாக்களுக்கு அமைதியை அளிக்கட்டும்” என்று கூறினார். இது “ஒரு பயங்கரமான சூழ்நிலை, அது ஒருபோதும் நடந்திருக்கக்கூடாது” என்று கூறி ட்ரூத் சோஷியலிலும் கருத்து தெரிவித்தார்.

நாட்டின் அதிக கண்காணிப்பு செய்யப்படும் வான்வெளிகளில் ஒன்றில் இந்த விபத்து நிகழ்ந்ததால், இதுபோன்ற ஒரு சோகம் எவ்வாறு நிகழ முடிந்தது என்பதை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் தரவு, விமானப் பாதைகள் மற்றும் தொடர்பு தோல்விகள் ஆகியவற்றை விமான மற்றும் ராணுவ வல்லுநர்கள் மதிப்பாய்வு செய்து, பேரழிவிற்கான காரணத்தைக் கண்டறிகின்றனர்.