ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற்று வரும் வரும் நிலையில் வெளிநாடுகளில் இருந்தும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கரம் நீண்டுள்ளது.

பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கின் காரணமாக, தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது, இதனால் நடந்த இரண்டு ஆண்டுகளாகவே தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பு இருந்தாலும், இந்த ஆண்டு அது வலுத்துள்ளது. 
உச்சநீதிமன்றத்தின் தடையை மீறி, மதுரை, திருச்சி,காரைக்குடி,தேனி, திருவள்ளுர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றன.

பல இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து, சாலை மறியல், கருப்பு கொடி கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் தமிழகம் மட்டுமல்லாது, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
சீனாவின் ஷங்காய் நகரில் இந்த ஆண்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இதில் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு, தங்கள் பாரம்பரிய விழாவை சிறப்பாக, குதூகலமாக கொண்டாடினர். 
பின்னர் பீட்டா அமைப்பை கண்டித்தும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.