இந்திய பிரதமர் மோடி வரும் பிப்ரவரி மாதம் தன்னை வெள்ளை மாளிகையில் சந்திப்பார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்று இருக்கும் டொனால்ட் டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் நேற்று பேசி இருந்தார். இந்நிலையில், நேற்று புளோரிடாவில் இருந்து விமானப் படை தளத்துக்கு செல்லும் வழியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், வரும் பிப்ரவரி மாதம் வெள்ளை மாளிகையில் என்னை இந்திய பிரதமர் மோடி சந்திப்பார் என்று தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் அவர் செய்தியாளர்களிடம், ''இன்று காலை பிரதமர் மோடியிடம் நீண்ட நேரம் தொலைபேசியில் பேசினேன். அடுத்த மாதம் என்னை அவர் வெள்ளை மாளிகையில் சந்திப்பார். எங்களுக்கு இடையிலான நட்புறவு வலுவாக உள்ளது'' என்றார்.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக ஜனவரி 20ஆம் தேதி டொனால்ட் டிம்ரப் பதவியேற்று இருந்தார். இதற்குப் பின்னர் முதல் முறையாக அதிகாரபூர்வமாக அவருடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது இருவரும் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளின் நலன்கள் குறித்தும், அமைதிக்கு, ஸ்திரத்தன்மைக்கு இணைந்து செயல்படுவது குறித்தும் ஆலோசித்தனர். இரண்டாவது முறையாக பதவியேற்று இருக்கும் டொனால்ட் டிரம்புக்கு பிரதமர் மோடி மீண்டும் வாழ்த்து தெரிவித்தார்.

இத்துடன் மேற்கு ஆசிய நாடுகள், உக்ரைன் நாடுகள் குறித்து விவாதித்தனர். இருவரும் விரைவில் அதிகாரபூர்வமாக சந்திப்பது என்று முடிவு செய்தனர்.

டொனால்ட் டிரம்புடன் பேசியது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், ''எனது அன்பு நண்பர் அதிபர் டொனால்ட் டிரம்புடன் பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது வரலாற்று சிறப்புமிக்க இரண்டாவது பதவிக்காலத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பரஸ்பர நன்மை பயக்கும் மற்றும் நம்பகமான கூட்டு முயற்சிக்கு நாங்கள் உறுதி எடுத்துள்ளோம். நமது மக்களின் நலனுக்காகவும், உலகளாவிய அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பிற்காகவும் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்'' என்று பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

இதற்கு முன்னதாக கடந்த நவம்பர் 7ஆம் தேதி பெரிய அளவில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்புக்கு தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து இருந்தார். ஜனவரி 20 ஆம் தேதி வெள்ளை மாளிகையில் நடந்த டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழாவில் பெரும்பாலும் வெளிநாட்டுத் தலைவர்களை விட தொழில்நுட்பத்துறையில் சிறந்து விளங்கி வரும் சுந்தர் பிச்சை, எலான் மஸ்க், மார்க் ஜுக்கர்பெர்க், இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி அவரது மனைவி நீதா அம்பானி ஆகியோர் கலந்து கொண்டு இருந்தனர். இந்திய அரசு சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கலந்து கொண்டு இருந்தார்.

இதையடுத்து வரும் பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இருவரும் சாதிக்க இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. இதை டிரம்ப் உறுதிபடுத்தி இருக்கிறார்.

Indian Sriram Krishnan | டிரம்ப் நிர்வாகத்தில் AI பொறுப்பு ஏற்கும் தமிழர் ஸ்ரீராம் கிருஷ்ணன் யார்?
அமெரிக்காவில் இந்தியர்கள் சட்டவிரோத குடியேற்றம்:

மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது 25% வரி விதிக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீதும் இறக்குமதி வரி விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறி இருக்கும் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினரை வெளியேற்ற டிரம்ப் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். இது இந்தியாவில் இருந்து சென்று இருக்கும் 18,000 பேரை பாதிக்கும் என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து இருவரது சந்திப்பில் பேசப்படலாம் என்று தெரிகிறது.

பிரான்சில் AI மாநாடு:

இதற்கிடையே பிரான்சில் அடுத்த மாதம் நடக்கும் செயற்கை தொழில்நுட்பம் தொடர்பான மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உறுதி அளித்துள்ளார். இந்த மாநாட்டில் டொனால்ட் டிரம்பும் கலந்து கொள்கிறார். எனவே, இருவரும் இந்த மாநாட்டிலும் சட்டவிரோத இந்தியர் குடியேற்றம், இறக்குமதி வரி, முதலீடு, வரி, ராணுவ ஒத்துழைப்பு, வர்த்தகம் குறித்து இருநாட்டுத் தலைவர்களும் கலந்து ஆலோசிப்பார்கள் என்று கூறப்படுகிறது

இதையடுத்து இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற இருக்கும் குவாட் உச்சி மாநாட்டில் டொனால்ட் டிரம்ப் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிரம்பின் புதிய குடியுரிமைச் சட்டம்!குறைபிரசவம் செய்கிறார்களா இந்திய கர்ப்பிணிகள்?|Asianet NewsTamil

மார்கோ ரூபியோ, ஜெய்சங்கர் சந்திப்பு:

முன்னதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து அமெரிக்காவில் பேசி இருந்தார். அப்போது இருவரும் இந்தியர்களுக்கு தாமதமாக விசா வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர். அப்போது சட்டவிரோத இந்தியர்கள் குடியேற்றம் குறித்தும் ரூபியியோ கேள்வி எழுப்பி இருந்தார். இந்த நிலையில், சட்டவிரோதமாக குடியேறி இருக்கும் இந்தியர்களை திரும்ப பெறுவதற்கு இந்தியா தயாராக இருப்பதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஜோ பைடன் அமெரிக்க அதிபராக குடியேறிய போது அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

மோடி டிரம்ப் கடைசி சந்திப்பு:
அமெரிக்க அதிபர் டிரம்பும் பிரதமர் மோடியும் நல்ல நட்புறவுடன் இருந்து வருகிறார்கள். இருவரும் செப்டம்பர் 2019-ல் ஹூஸ்டனில் நடந்த இரண்டு வெவ்வேறு பேரணிகளிலும், பிப்ரவரி 2020-ல் அகமதாபாத்திலும் ஆயிரக்கணக்கான மக்களிடையே உரையாற்றி இருந்தனர்.