ஜல்லிகட்டு விவகாரத்தில் விலங்குகள் நல அமைப்பான பீட்டா -வுக்கு எதிராக கடுமையாக கருத்துக்களை தெரிவித்த நடிகர் கமல் ஹாசனுக்கு பீட்டா அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி பூர்வா ஜோஷிபுரா பதில் அளித்துள்ளார்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப்போட்டிக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க முக்கியக் காரணமாக பீட்டா அமைப்பு இருந்தது. இதனால், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய இளைஞர்கள், மாணவர்கல் கோரிக்கை வைத்தனர்.

அப்போது பீட்டா குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த நடிகர் கமல் ஹாசன், “பீட்டா இந்தியாவுக்கு இந்திய காளைகளை கையாள தகுதியில்லை. முதலில் அமெரிக்காவில் காளைகளுக்கு ஏற்படுகின்ற , குறிப்பாக ‘ரோடியோ’ எனப்படும் காளைச்சவாரி கொடுமைகளை தடுத்து நிறுத்த முயற்சி எடுக்க வேண்டும்'' என்று கூறி இருந்தார்.

இதற்கு பதில் அளித்து பீட்டா இந்தியா அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரிபூர்வா ஜோஷிபுரா நேற்று வௌியிட்ட அறிக்கையில், “ பீட்டா இந்தியா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம்,

இந்தியாவில் உள்ள காளைகள், விலங்கினங்களுக்கு ஏற்படுகின்றன கொடுமைகளை தடுத்து, அவற்றுக்கு உதவும்,

இந்திய நிறுவனம். பீட்டா யு.எஸ்.(PETA-U.S.) என்பது, அமெரிக்காவில் கடந்த 1980ம் ஆண்டில் இருந்து செயல்படும் அமைப்பு. அங்கு நடைபெறும் விலங்களுக்கு ஏற்படுகின்ற கொடுமைகளை தடுத்தும் நிறுத்தும் பணிகளில் அது ஈடுபட்டு வருகிறது.

அமெரிக்காவில் காளைச்சண்டை சட்டவிரோதமாக்கபட்டுள்ளது ,ரோடியோ(rodeo) என்ற கொடுமையான காளைச்சவாரி விளையாட்டு பல மாநிலங்களில் சட்டவிரோதமாக ஆக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இங்கிலாந்து, நெதர்லாந்துகளில் இந்த ரோடியோ எனப்படும் காளைச்சவாரி தடை செய்யப்பட்டுள்ளது. பீட்டா யூரோப் அமைப்பும், மற்ற அமைப்புகள் ஆகியவற்றின் முயற்சியால் ஸ்பெயின் நாட்டின் பல நகரங்களில் காளைச்சண்டை சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.