435 கிலோ எடையுள்ள இளைஞரின் சாதனையையும், ஆசையும் தெரியுமா?
நாள் ஒன்றுக்கு 5 லிட்டர் பால், 36 முட்டைகள், 3 கிலோ மாமிசம் சாப்பிடுகிறார்
ஹாலிவுடின் ‘ஹல்க்’ படத்தில் வரும் அசுர மனிதர் போல் பாகிஸ்தானின் மர்தான் நகரை வலம் வருகிறார் 435 கிலோ எடை கொண்ட மனிதர்.
ஒரு கையில் யாரையும் தூக்கிவிடுவார்; ஒரு டிராக்டரை வெறும் கைகளால் நகராமல் நிறுத்திவிடுவார்; இரு கார்களை தனது கைகளால் தூக்கிவிடுவார்; இந்த 435 கிலோ எடை கொண்ட 25 வயதான இளைஞர்.

மல்யுத்த போட்டி
பாகிஸ்தானின் ‘ஹல்க்’ மனிதர் என்று செல்லமாக அழைக்கப்படும் அராப் கிஜர் கியாத். உலகின் மிக வலிமையான மனிதர் எனும் பட்டத்தை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து மர்தான் நகரில் வசிக்கும் அராப் கிஜர்கியாத் கூறுகையில், “ என்னுடைய இலக்கு வலுதூக்கும் போட்டியில் சாம்பியன் பட்டம் பெறுவதாகும். எனக்கு இந்த மாதிரியான மிகப்பெரிய உடல் அமைப்பைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி. 435 கிலோ எடை இருப்பதால், இதுவரை எந்தவிதமான மருத்துவ சிகிச்சையும் நான் எடுத்துக்கொண்டதில்லை. மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுகின்றேன். டபிள்யு. டபிள்யு. இ.(W.W.E.) போட்டியில் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கில் என்னை தயார் செய்து வருகிறேன்'' என்றார்.
என்ன சாப்பிடுவார்?
6.3 அடி உயரம் கொண்ட அராப்பின் உடல் எடை 435 கிலோ ஆகும். இவரின் என்ன சாப்பிடுவார் எனக்க கேட்டால் மலைத்துவிடுவோம், நாள் ஒன்றுக்கு 36 முட்டை, 3 கிலோ மாமிசம், 5 லிட்டர் பால் ஆகியவை அராப் சாப்பிடும் உணவாகும். 435 எடை கொண்டு இருந்தும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல அவர் காட்டும் சுறுசுறுப்பு , ஓட்டம் அனைவரையும் பிரமிப்பாக்குகிறது.
சமீபத்தியசாதனை
இவர் சமீபத்தில் செய்த சாதனைதான் அனைவர் மத்தியில் பிரபலப்படுத்தியது. பின்னால் செல்லும் டிராக்டரை தனது கையால் இழுத்துப்பிடித்து நிறுத்தியது, இரு கார்களையும் தனது கையால் ஒரே நேரத்தில் தூக்கியது ஆகியவை பாகிஸ்தானில் புகழ்மிக்க மனிதராக வலம் வரச் செய்தது. நாள்தோறும் அராப்பை பார்க்க ஏராளமானோர் அவர் வீட்டுக்கு வருகின்றனர். அவரின் உடல் அமைப்பைப் பார்த்து பிரமித்து, அவருடன் செல்பி எடுத்துச் சென்கின்றனர்.
