11:04 AM (IST) May 10

இலங்கை காவல்துறை மற்றும் ராணுவத்துக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

இலங்கை காவல்துறை மற்றும் ராணுவத்துக்கு அந்நாட்டின் மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மே 12ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

10:31 AM (IST) May 10

போராட்டகாரர்கள்- முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் மோதல்.. 7 பேர் பலி

இலங்கையில் போராட்டகாரர்கள்- முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் மோதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் ஏ.வி.சரத் குமார உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். போராட்டக் களத்தில் இருந்த 220க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

08:59 AM (IST) May 10

வெளிநாடு தப்பித்து செல்கிறாரா மகிந்த ராஜபக்சே?

இலங்கையில் மக்கள் போராட்டம் வலுக்கும் நிலையில், அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்சே வெளியேறினார். மகிந்த ராஜபக்சே சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

08:07 AM (IST) May 10

இலங்கையில் தொடரும் பதற்றம்.. அதிபர் இன்று அவசர ஆலோசனை

இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சே, கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் தொடரும் நிலையில் ஆலோசனை நடைபெற உள்ளது.

07:57 AM (IST) May 10

இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளை காலை 7 மணி வரை நீட்டிப்பு

பொருளாதார நெருக்கடியால் இலங்கை முழுவதும் நடைபெற்று வந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் ஊரடங்கு நாளை காலை 7 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

07:12 AM (IST) May 10

இலங்கையில் வன்முறை... 4 பேர் உயிரிழப்பு

இலங்கையில் வன்முறை வெடித்துள்ள நிலையில், ஆளும் கட்சியின் எம்.பி. உள்பட 4 பேர் உயிரிழந்தனர். இரவில் பிரதமரின் இல்லத்துக்கு தீவைத்து போராட்டக்காரர்கள் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர்.

07:00 AM (IST) May 10

மகிந்த ராஜபக்சே வீட்டுக்கு தீ வைப்பு.. கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடிப்பு

இலங்கை முழுவதும் கலவரம் வெடித்துள்ள நிலையில் குருனாகல்லில் உள்ள மகிந்த ராஜபக்சே வீட்டுக்கு தீ வைத்தனர். பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் 4-வது முறையாக போராட்டக்காரர்கள் நுழைய முயற்சித்த போது கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் விரட்டியடித்தனர்.

06:39 AM (IST) May 10

மகிந்த ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும்.. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள்

மகிந்த ஆதரவாளர்கள் திட்டமிட்டே வன்முறையை உருவாக்கி உள்ளனர். பதவி போவதால் அதற்கு காரணமான பொதுமக்களை பலிகடாவாக்க துணிந்துள்ளனர். அவரை கைது செய்ய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் கூறியுள்ளனர்.

06:37 AM (IST) May 10

எதிர்க்கட்சி தலைவர் மீது தாக்குதல்

இலங்கையில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசா, பிரதமர் இல்லம் அமைந்துள்ள பகுதிக்கு சென்றார். அப்போது மகிந்தா ஆதரவாளர்கள் அவர் மீதும் தாக்குதல் நடத்தினர். உடனடியாக பாதுகாவலர்கள் அவரை மீட்டு அங்கிருந்து பத்திரமாக அழைத்து வந்தனர்.

06:36 AM (IST) May 10

மகிந்த ராஜபக்சேவின் வீடு தீவைத்து எரிப்பு

மகிந்த ராஜபக்சே பதவி விலகியதை அடுத்து, குருணாகல் நகர பகுதியில் உள்ள அவரது வீடு மற்றும் கொழும்புவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிட்டு, மக்கள் போராட்டம் நடத்தினர். இதில், குருணாகலில் உள்ள மகிந்த வீட்டை தீவைத்து எரித்தனர். பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் மீது தாக்குதல் நடத்திய மக்கள், உள்ளே செல்ல பலமுறை முயன்றனர். 

06:34 AM (IST) May 10

மகிந்த ராஜபக்சவின் ராஜினாமா ஏற்பு

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ராஜினாமாவை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஏற்றுக்கொண்டதாக அதிபர் மாளிகை அதிகாரபூர்வ அறிவித்துள்ளது. 

06:34 AM (IST) May 10

இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நீட்டிப்பு

இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு 11ம் தேதி காலை 7 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணி வரை அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கை நீட்டித்து அதிபர் கோத்தபய ராஜபக்ச அறிவித்துள்ளது.