விமானத்தை கடத்திய தீவிரவாதிகள் : பயணிகளை விடுவித்து சரணடைந்தனர்!
லிபியா விமானத்தை கடத்தி மால்டாவில் தரையிறக்கிய தீவிரவாதிகள், அதில் இருந்த பயணிகள் அனைவரையும் விடுவித்தனர். பேச்சுவார்த்தைக்குப் பின்னர், பாதுகாப்புப்படையினரிடம் தீவிரவாதிகள் சரணடைந்ததால், நீண்ட நேரம் நீடித்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள லிபியாவில், பயணிகள் விமானம் ஒன்றை, தீவிரவாதிகள் திடீரென கடத்திச் சென்றனர். Afriqiyah Airways நிறுவனத்துக்கு சொந்தமான இந்த பயணிகள் விமானம், 118 பேருடன் Sebha நகரில் இருந்து Tripoli-க்கு சென்றது.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், அதில் இருந்த தீவிரவாதிகள் இருவர், வெடிகுண்டுகளுடன் வந்திருப்பதாக மிரட்டல் விடுத்து விமானத்தை கடத்திச் சென்றனர். லிபியா அருகே உள்ள சிறிய தீவு நாடான மால்டாவில் விமானத்தை தரையிறக்க வைத்த தீவிரவாதிகள், விமானத்தை, வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாகவும் அச்சுறுத்தினர். இதனால் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்ட நிலையில், கடத்தப்பட்ட பயணிகள் அனைவரையும் விடுவித்த தீவிரவாதிகள், பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தனர். இந்த தகவலை வெளியிட்டுள்ள மால்டா பிரதமர் joseph muscat, சரணடைந்த தீவிரவாதிகள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். விமானத்தைக் கடத்திய தீவிரவாதிகள் லிபியாவின் முன்னாள் அதிபர் கடாஃபியின் ஆதரவாளர்கள் என கூறப்படுகிறது.