இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயகே யாழ்ப்பாணம் பயணத்தின் போது திடீரென கச்சத்தீவுக்கு சென்று பார்வையிட்டார். கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது, யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என அவர் அறிவித்தார்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்க ஒரே வழி கச்சத்தீவை மீட்கப்பட வேண்டும் என தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
தவெக தலைவர் விஜய்
சமீபத்தில் மதுரையில் மாநாட்டை நடத்திய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னைக்கு, கச்சத்தீவை மீட்பதே ஒரே தீர்வு. அதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். விஜய்யின் இந்த பேச்சுக்கு இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹேரத் கண்டனம் தெரிவித்தார்.
இலங்கை அதிபர்
இந்நிலையில் இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயகே யாழ்ப்பாணத்துக்கு 2 நாள் பயணமாக நேற்று காலை வந்தார். இதையொட்டி அவர் யாழ்ப்பாணம் மயிலட்டி துறைமுகத்தை பார்வையிட்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டினார். பின்னர் திடீரென நான்கு ரோந்துப் படகுகளுடன் கச்சத்தீவுக்கு சென்றார். அங்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கச்சத்தீவை சுற்றிப் பார்த்தார். பின்னர் கடற்படை அதிகாரிகளுடன் கச்சத்தீவு குறித்து சிறிது நேரம் பேசினார்.
கச்சத்தீவு எங்களுடைய பூமி
அப்போது பேசிய இலங்கை அதிபர் கச்சத்தீவு எங்களுடைய பூமி, அதை வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது. இலங்கை மக்கள் நலனுக்காக, கச்சத்தீவைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன். எந்த செல்வாக்கிற்கும் அடிபணிய மாட்டேன் எனவும் தெரிவித்தார்.
கச்சத்தீவு நேரில் பார்வையிட்ட முதல் அதிபர்
இலங்கை அதிபர் பதவியில் இருந்தபோது ஒருவர்கூட, இதுவரை கச்சத்தீவை நேரில் வந்து பார்வையிட்டது கிடையாது. ஆனால் தற்போது இலங்கை அதிபராக உள்ள அனுரகுமார திசநாயகே கச்சத்தீவு சென்று நேரில் பார்வையிட்டது சென்றது குறிப்பிடத்தக்கது.
